பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் மிக முக்கியமான பாண்டி பஜார் பகுதியில் வாகனப் பேரணி நடத்தினார். ஏராளமான பெண்களும் இளைஞர்களும் திரண்டு வந்து உத்ஸாகமாக அதில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆங்கில வருடம் 2024 தொடங்கியதில் இருந்து, தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு, இன்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்துள்ளார். தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் வாகனப் பேரணி நடைபெறும் இடத்தை வந்தடைந்தார்.
பனகல் பூங்கா முதல் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தொலைவுக்கு, வாகனப் பேரணியில் பிரதமா் மோடி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வந்தார். சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள், குறிப்பாக பெண்களும் இளைஞர்களும் பெருமளவில் கூடி நின்று, பூக்களைத் தூவி பிரதமர் மோடியை வரவேற்றார்கள்.
சென்னையின் மூன்று பாஜக., வேட்பாளா்களான தமிழிசை சௌந்தரராஜன் (தென் சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்.கனகராஜ் (வட சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரதமா் மோடி வாக்கு சேகரித்தார். பிரதமர் மோடியுடன் பிரசார வாகனத்தில் பாஜக., மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பால்.கனகராஜ் ஆகிய பாஜக வேட்பாளர்களும் உடன் இருந்தனர்.
வாகனப் பேரணி நடைபெறும் பாண்டி பஜார் பகுதி கடை வீதிகள் அதிகம் நிறைந்த பரபரப்பான பகுதி. இதை முன்னிட்டு, தி.நகர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாகனப் பேரணி நடைபெற்ற சாலையில் உள்ள கடைகள் இன்று மூடப்பட்டிருந்தன. பனகல் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, பனகல் சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீஸார் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டார்கள்.
இந்தப் பகுதியில் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது. வாகனப் பேரணி நடைபெறும் தியாகராய நகா் பகுதி, பிரதமா் மோடி தங்கும் கிண்டி ஆளுநர் மாளிகை ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னையின் மூன்று தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களுடன் மூன்று தொகுதிகளையும் சேர்ந்த பெண்களும் இளைஞர்களும் பெருமளவில் வந்திருந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்தனர். சென்னை தியாகராய நகர் பகுதி திருவிழாக்கோலம் போட்டிருந்தது. நாதஸ்வர இசை நிகழ்ச்சிகளுடன் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரிய வேஷ்டி சட்டையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி வாகனத்தில் ஏறி மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்து வந்தார். அவர் தன் கையில் ஒரு தாமரை சின்னத்தை ஏந்தி உத்ஸாகத்துடன் புன்னகைத்தபடி வந்தார்.
இன்று இரவு பிரதமர் மோடி கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் சென்று, வேலூா் கோட்டை மைதானத்தில் காலை 10.30க்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூா் பாஜக., வேட்பாளா் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னா் ஹெலிகாப்டரில் சென்னைக்கு காலை 11.30க்கு வரும் அவா், அங்கிருந்து கோவை சூலூா் விமானப்படைத் தளத்துக்கு விமானத்தில் செல்கிறாா். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமா் மோடி, நீலகிரி பாஜக., வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறாா். அதன் பின் சூலூா் விமானப்படை தளத்துக்கு திரும்பும் பிரதமா், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு விமானத்தில் செல்கிறாா். பிரதமரின் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.