பக்தி பகல் வேஷம் போடுவது யார்? தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி கேள்வி!

Published:

kadeswara subramaniam hindu munnani - 2026

பக்தி பகல் வேஷம் போடுவது யார்? தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் என்று சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இந்தக் கோவில் மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கடவுள் படம் எதுவும் வைக்கப்படவில்லை, கோயில் உண்டியல் பணத்தில் திருமணச் செலவுகள் செய்யப்படுகின்றன. ஆனால் விளம்பரம் மட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு? இது என்ன வேஷம் என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும்

கோயிலில் நடக்கும் எந்த ஒரு ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கலந்து கொள்வதில்லை. அமர்ந்த இடத்தில் இருந்தே காணொளி காட்சி மூலம் மட்டுமே கலந்து கொள்வது எந்தவிதமான பக்தி என்பது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.!

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று பேசிய ஈவேரா தான் எங்கள் தலைவர் என்று ஒருபுறம் கூறுவது, மறுபுறம் நான் அறநிலையத்துறை சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் தான் அதிகம் கலந்து கொள்கிறேன் என பசப்புவது தான் முதல்வரின் பகல் வேஷ அரசியலாகும்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

கோயிலுக்குச் சென்று திருநீறு கொடுத்தால் அதை நெற்றியில் பூசாதது. அப்படி பூசினாலும் அது மீடியாவில் செய்தியாக வந்து விடக்கூடாது என்பதால் அதை அழிப்பது பகல் வேஷ அரசியலா? பசப்பு அரசியலா? என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தையும் வேல் வழிபாட்டையும் இழிவுபடுத்திப் பேசியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையோ, கண்டனமோ தெரிவிக்காமல் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது யாரை ஏமாற்றப் போடும் பகல் வேஷ அரசியல் நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்.

தமிழகத்தில் 2000 கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக வெற்று விளம்பரம் செய்யும் திராவிட மாடல் அரசு, இதில் கும்பாபிஷே விழாவிற்கு அறநிலையத்துறை, தமிழக அரசு செய்த செலவு எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா ?

ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின் பல கோவில்கள் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகவும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருப்பதாகக் கூறி இடித்துத் தரைமட்டமாக்கினார்களே! கோவில் நிலத்தில் பேருந்து நிலையம், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளதே! இவைகளை இடித்து அப்புறப்படுத்த துணிவு உண்டா?

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

நாத்திகர்களும், நக்சல்களும் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதும் ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது பக்தி வேஷம் போடுவதும் சந்தர்ப்பவாத பகல்வேஷ அரசியலா? இரவு வேஷ அரசியலா? என முதல்வர் ஸ்டாலின் தான் விளக்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img