
நீதித்துறையை தங்கள் போக்குக்கு வளைக்க திட்டமிட்டு செயல்படும் விபரீத முயற்சி இது என்றும், சாதீய வெறுப்புணர்வைத் தூண்டும் அவலம் நடக்கிறது, அதற்கு ஆதரவாய் ஆளும் வர்க்கம் செயல்படுகிறது, இது ஜனநாயகத்திற்கு மாபெரும் களங்கம் என்றும் கூறி, இதனை இந்து முன்னணி கடுமையாக கண்டிப்பதாக, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தெரிவித்த குற்றச்சாட்டில் இந்து முன்னணி மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு நடத்த அனுமதி அளித்த உத்தரவை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வழக்கில் அரசு தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்களையும்; இந்து முன்னணி வாதங்களையும் முழுமையாகக் கேட்டறிந்து ஜனநாயக கோட்பாடுகள் அடிப்படையில் மாநாடு நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்தது. அதன்படி இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நீதிமன்ற உத்தரவு மற்றும் காவல்துறை, அரசு அதிகாரிகள் வழிகாட்டுதலை முறையாக செயல்படுத்தவும் பட்டது.
விதிகளைப் பின்பற்றி கட்டுக்கோப்பாக அந்த மாநாடு நடத்தபட்டது குறித்து அனைத்து ஊடகங்கள் மாத்திரமல்லாது பல்வேறு அமைப்புகளும் கூட பாராட்டுதல்களைப் பதிவு செய்தன. மாநாட்டில் கலந்து கொண்ட ஐந்து லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் அதற்கு சாட்சி.
இப்படி இருக்கையில் அந்த மாநாட்டை நடத்த அனுமதி அளித்த உத்தரவை மேற்கோள் காட்டி நீதியரசர்களை இழிவு படுத்தும் வழக்கறிஞர் திரு. வாஞ்சிநாதன் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் ஒய்வு பெற்ற சில நீதிபதிகள் மற்றும் திமுக; விசிக உட்பட்ட சில கட்சிகளுக்கும் இந்து முன்னணி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சமீபத்தில் மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் உத்தரவுகளுக்கு உள்நோக்கம் கற்பித்து சாதிய மற்றும் சமய சார்பாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அவதூறை சமூக ஊடகத்தில் பதிவிட்டும் அதையே உச்சநீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ததாகவும் செய்திகள் வாயிலாக தெரியவருகிறது.
இது குறித்து நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களை நேரில் ஆஜராகி விளக்கம் கேட்ட நிலையில் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கவும் உத்திரவிட்டுள்ளதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
அரசு தரப்பு மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்து நமது அரசியல் அமைப்பு சட்ட படி பிறப்பிக்கபட்ட உத்தரவுக்கு ஜாதி, சமய உள்நோக்கம் கற்பித்து அவதூறு பரப்பும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு ஆதரவாக அவர் அளித்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்று 8 முன்னாள் நீதிபதிகள் கையெழுத்திட்ட பெட்டிஷன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே சமயத்தில் வாஞ்சினாதனுக்கு ஆதரவு மனு பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை, நான் அந்த மனுவில் கையெழுத்திடவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி கே.கே. சசிதரன் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நீதிபதி கே.கே. சசிதரன் கையெழுத்தை மனுவில் போலியாக போட்டது எந்தளவு மோசமான சட்டவிரோத செயல் என்பதையும் வாஞ்சினாதனும் அவருக்கு ஆதரவு தெரிவிப்போர்களும் எப்படியானவர்கள் என்பதற்கு எடுத்துகாட்டாகும்.
அந்த வகையில் நீதிபதிகள் மீதான அவதூறு பரப்பும் பின்னணியில் திமுகவினர் செயல்படுகிறார்கள் என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலாது.
இதற்கு காரணம் சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுகவின் மூத்த அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு, கனிம வள கொள்ளை வழக்குகள் தீர்ப்பு தொடர்ந்து வர இருக்கின்றன. இந்நிலையில் அந்த வழக்குகளின் தீர்ப்பை முடக்க அல்லது நீதிதுறையை அச்சுறுத்த இதுபோன்ற அவதூறுகளை பின்புலத்தில் இருந்து திமுக தூண்டி வருகிறது என்றால் மிகையில்லை.
இதுபோல் அமைச்சராக இருந்த பொன்முடி இந்து மதத்தை பெண்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டு மற்றும் கன்னியாகுமரி சர்ச் பிரச்சினையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர். இதுவும் திமுகவை எரிச்சலடைய செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நீதித்துறைக்கு எதிராக, நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்பிய அட்வகேட் வாஞ்சிநாதனுக்கு ஆதரவு என்ற பெயரில் ஒய்வு பெற்ற நீதிபதிகள் லாபி செய்வது நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.
மேலும் இதைப்போன்ற குற்றச்சாட்டை நீதிபதி புகழேந்தி மீதும் கம்யூனிஸ்ட் ஊடகமான வினவு மின் இதழ் வெளியிட்டுள்ளது, அந்த வகையில் திக, திமுக, கம்யூனிஸ்ட் போன்றவர்களின் விருப்பு வெறுப்புக்கு உடன்படாத நீதிபதிகளை அவதூறு கருத்துகளை பரப்பி மிரட்டி பணிய வைக்கும் முயற்சியாகவே வாஞ்சினாதன் போன்றோரின் செயல்களை பார்க்க வேண்டியுள்ளது.
மேலும் அட்வகேட் வாஞ்சிநாதன் நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டவர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டி அதனை கலவரமாக்கி 11 பேர் உயிழக்க காரணமாக இருந்தவர். அதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். மேலும் நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டதால் வழக்கறிஞராக இருக்கவே தகுதியற்றவர் என்பதை குறிப்பிட்டே இந்திய பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யபட்டவர். இதுமட்டுமால்லாம வாஞ்சிநாதன் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரியவருகிறது.
ஆகவே பொதுமக்களும் வழக்கறிஞர்கள் சமுதாயமும் இதுபோன்ற தவறானவர்களின் கருத்துகளை புறக்கணித்து அவர்களுக்கு எவ்விதமான ஆதரவையும் கொடுக்ககூடாது என்பதை இதன் மூலம் கேட்டுகொள்கிறோம்.
அதேபோல வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட ஒய்வு பெற்ற நீதிபதிகள் அரிபரந்தாமன், சந்துரு முதலானவர்கள் பகிரங்கமாக தேசவிரோத கம்யூனிஸ்ட் திராவிட கூட்டங்களில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை பார்க்கிறோம். இவ்வாறான சர்ச்சைகுரிய கருத்தினை கொண்ட இவர்கள் நீதிபதிகளாக பணியாற்றியபோது உள்நோக்கத்துடன் ஒருசார்பாக செயல்பட்டு இருக்கமாட்டார்கள் என்பதை எவ்வாறு ஏற்பது. எனவே இவர்கள் வழங்கிய தீர்ப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் செய்ய சாதி, சமயத்தை குறிப்பிட்டு கூறி நீதியரசர்களை இழிவுப்படுத்த்துவதை உச்ச நீதிமன்றம் கடுமையான விஷயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
நீதிபதிகள் மீது அவதூறு பரப்பி நீதித்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர பிளாக்மெயில் அரசியல் செய்யும் அட்வகேட் வாஞ்சிநாதன் மற்றும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஒய்வு பெற்ற நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.





