
வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில் ஏராளமான ரயில்வே திட்டங்கள் துவங்கி வைக்கப்பட உள்ளது. நான்கு புதிய ரயில் சேவைகளும் துவங்கி வைக்கப்படும் என தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய ரயில் சேவைகளாக தாம்பரம் மங்களூர் அம்ரித் பாரத் ரயில் , கோயம்புத்தூர் தன்பாத் அம்ரித் பாரத் , மங்களூர் இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
நாகர்கோவில் சார்லபள்ளி அம்ரித் பாரத் ஆகிய ரயில் இயக்கப் படுகிறது.
அம்ரித் பாரத் நிலையங்கள்
மொரப்பூர் ஸ்ரீவில்லிபுத்தூர் பொள்ளாச்சி சோழவந்தான் பொம்மிடி திருவாரூர் காரைக்குடி மணப்பாறை ஆகிய நிலையங்கள் முழு அளவில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது அது திறக்கப்பட உள்ளது. திறந்து வைக்கப்படும் திட்டங்களாக சென்னை கடற்கரை சென்னை எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்காவது ரயில் வழித்தடம் ரயில் சேவைகளுக்கு திறந்து வைக்கப்படுகிறது .
மதுரையில் மார்ச் 1ல் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோரிக்கைகள்
இதனிடையே பிரதமரின் வருகையை ஒட்டி, சில கோரிக்கைகளை பயணிகள் நலச் சங்கத்தினர் வெளியிட்டனர். அவை…
மத்திய அரசே, இரயில்வே அமைச்சகமே, இரயில்வே வாரியமே
சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் இரயிலை விருதுநகர் சந்திப்புஇரயில் நிலையத்தில் நின்று செல்ல துரித நடவடிக்கை எடு.
மதுரை- திருநெல்வேலி , மதுரை- செங்கோட்டை, மதுரை- உசிலம்பட்டி, தேனி வழியாக போடி வரையிலும், மதுரை- இராமேஸ்வரம், மதுரை- திண்டுக்கல், திருச்சி. விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக காரைக்குடி வரையிலும் புதியதாக டெமு அல்லது மெமு ரயில்களை இயக்கிடுக.
திருச்செந்தூர்-திருநெல்வேலி இரயிலை மதுரை சந்திப்பு வரை நீட்டிப்பு செய்திடுக.
பிரதமரின் பயணத்திட்டம்
இந்நிலையில், மதுரைக்கு மார்ச் 1ல் வருகை தரும் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் வெளியாகி உள்ளது.
மதுரை மண்டேலா நகரில் மார்ச் 1ல் தேஜகூ., கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பாஜக., தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக. தலைவர் அன்புமணி, அமமுக., தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அன்று காலை, புதுச்சேரி அரசு சார்பிலான மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, ஹெலிகாப்டரில் மதியம் 2:45க்கு தஞ்சாவூர் வரும் பிரதமர் பின்னர் அங்கிருந்து விமானத்தில் மதியம் 3:30க்கு மதுரை வருகிறார்.
விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட ரயில்வே நிலையங்களை திறந்து வைக்கிறார். பரமக்குடி – ராமநாதபுரம் நான்குவழிச் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். பின் மாலை 4:00 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு மாலை 4:30க்குப் புறப்பட்டு மண்டலோ நகர் வருகிறார். அங்கு பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மாலை 5:30 மணி அளவில் கிளம்பி, மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து மாலை 6:10க்கு தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.



