ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவினர் வன்முறை: விஜயகாந்த் கண்டனம்

Published:

vijayakanth ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வன்முறை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அவரது கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடன் வீதி வீதியாக வாக்கு சேகரிக்க சென்ற போது, ஆளும் அதிமுக கட்சியை சேர்ந்த சிலர் வன்முறையை கையில் எடுத்து அனைவரையும் தாக்கி உள்ளனர் அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மற்றும் அந்த கட்சியினரும் ஆளும்கட்சியால் தாக்கப்பட்டுள்ளனர். இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும் இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இடைத்தேர்தல் என்றாலே ஓட்டுக்கு பணம், வேட்டி, சேலை, மது, பிரியாணி வழங்குதல் என்று இலவசங்களை வாரி வழங்கி, ஏற்கனவே ஆட்சி செய்த திமுகவும், இப்பொழுது ஆட்சி செய்யும் அதிமுகவும், தேர்தலையும், ஜனநாயகத்தையும், பண நாயகத்தின் மூலமும், ஆட்சி அதிகாரத்தின் மூலமும் கேலிக் கூத்தாக்கி வருகின்றன. இந்த லட்சணத்தில் தேர்தல் நடப்பதால் மக்களுக்கு தேர்தல் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கை இல்லாத நிலை உருவாகி உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்திட, ஊழல் வாதிகளின் மீதும், வன்முறையாளர்கள் மீதும், இரும்புக் கரம் கொண்டு அடக்க தேவையான கடுமையான தேர்தல் விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் நம் தலைவர்கள் போராடி வாங்கி தந்த சுதந்திரமும், ஜனநாயகமும் வீணாகிவிடும். மேலும் காவல் துறையினர் வன்முறையை கையில் எடுத்த, ஆளும் அதிமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும். வன்முறையின் மூலம் பாதிக்கபட்டவர்களுக்கு சம்பந்தபட்டவர்களிடம் இருந்து உடனடியாக இழப்பீடு பெற்றுத்தர தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய, சட்டத்தை கையில் வைத்துள்ள காவல்துறை, ஆளும் கட்சியினரின் ஏவல் துறையாக மாறிந்து காலத்தின் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும். மாற்றம் ஒன்று தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு. ஊழலுக்கு எதிராக ஒட்டு மொத்த சமூகமும் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை மலர செய்வோம். ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம். -என்று கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img