சென்னை: பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
1958ஆம் ஆண்டு ‘முதலாளி’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முக்தா சீனிவாசன். பின்னர் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை வைத்துப் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.
ரஜினி நடித்த ‘பொல்லாதவன்’ படத்தை இயக்கியவர். ஜெயலலிதாவின் 100 -வது படமான ‘சூரியகாந்தி’ படத்தை இயக்கி உள்ளார். 65 படங்களை இயக்கிய இவர் தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றார்.
மேலும் ‘நாயகன்’ உட்பட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி அரசியலிலும் தடம் பதித்துள்ளார். ஜிகே. மூப்பானார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய போது, அக்கட்சியின் பொதுச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக பதவி வகித்தவர். சுமார் 350 சிறுகதைகள், மூன்று நாவல்களை எழுதிய இவரின் சிறுகதைகள் அனைத்தும் 16 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு’, ‘கலைஞர்களோடு நான்’, ‘கதாசிரியர்களோடு நான்’, ‘அறிஞர்களோடு நான்’ ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.




