தமிழக அரசு செலவிட்ட வெள்ளத் தடுப்பு நிவாரண நிதி ரூ. 600 கோடியில் ஊழல் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published:

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு நிவாரண பணிக்காக தமிழக அரசு செலவு செய்ததாக கூறப்படும், 600 கோடி ரூபாயில், ஊழல் நடந்துள்ளதா என, மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார் .

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த மாவட்ட பகுதிகளை நேற்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கடலூர் புதுப்பாளையம், குறிஞ்சிப்பாடி கல்குணம் கிராமம் ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பார்வையிட்ட ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது வடகிழக்கு பருவமழை கடுமையாக இருக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. அதனால் தான், இத்தனை பெரிய பாதிப்பு. ஏரிகள், கண்மாய்கள், ஆற்றுபடுகை களை பொதுப்பணித் துறை மூலம் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுத்துஇருக்க வேண்டும் ஆனால், செய்யவில்லை.

அமைச்சர் பன்னீர்செல்வமோ, மற்ற அமைச்சர்களோ, அதிகாரிகளோ, கொடநாடு சென்று, முதல்வரை சந்தித்தாவது, நிவாரண பணிகளுக்கு உடனடியாக ஏற்பாடு செய்திருக்கலாம். கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள், கொள்ளிடம் ஆற்றுப் படுகையில், வெள்ளத் தடுப்புப் பணிக்காக, 600 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது’ என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

நிவாரண நிதியை முறையாக செலவு செய்திருந்தால், மக்களை காப்பாற்றி இருக்கலாம். வெள்ளத் தடுப்பு நிதியில், ஊழல் நடந்துள்ளதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் பாகுபாடின்றி, நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். மருவாயில் தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் சென்றதை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையத்தில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து உதவிகளை வழங்கினார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இதுபற்றி தனது முகனூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஸ்டாலின், கடந்த சில தினங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 30க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கிறார்கள். மரணம் அடைந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பருவத்தில் மழை பெய்யும் என்று தெரிந்திருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு எவ்வித சாக்குபோக்கும் கூறி அ.தி.மு.க. அரசு தன் கடமையில் இருந்து தப்பிக்க முடியாது.

மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்குச் சென்று வெள்ளசேதப் பகுதிகளை பார்வையிட்டேன். தங்கள் துயரங்களை மக்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். வடகிழக்கு பருவமழை வரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே எச்சரித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க. அரசின் மீது மக்கள் ஆத்திரமாக இருக்கிறார்கள். அடிக்கடி வரும் இந்த வெள்ள சேதங்களை தடுக்க ஒரு நிரந்தர தீர்வை காணமுடியாத அ.தி.மு.க. அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை காண முடிந்தது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

அ.தி.மு.க. அரசோ, இதுவரை ‘வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக’ 600 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளது. ஆனால் அந்த பணிகள் எங்கே நடைபெற்றன?. அதன் பிறகும் ஏன் இவ்வளவு வெள்ளசேதங்கள் ஏற்பட்டது?. ஆகவே, வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக செலவு செய்த 600 கோடி ரூபாய் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், தங்கள் பயிரை இழந்த விவசாயிகளுக்கு போதிய நஷ்டஈடும் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வளவு மோசமான வெள்ள சேதங்கள் ஏற்படவிட்டு அமைதி காத்த அ.தி.மு.க. அரசின் பொறுப்பற்ற போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் அவரது முகனூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img