எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒப்புதல் அளிக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பது குறித்து மத்திய அரசு தற்போது இடத்தைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த அறிவிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு பட்ஜெட்டிலேயே அறிவிக்கப் பட்டது என்றாலும், மருத்துவமனை அமைவதற்கான இடங்களைத் தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் குறித்து 5 இடங்களைத் தேர்வு செய்து தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கலாம் என மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தோப்பூரில் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை தமிழக அரசின் சார்பில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4.30க்கு நடைபெறுகிறது. இதில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




