புது தில்லி:
புது தில்லி சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், திடீரென தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார். அவரது இந்த சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரத்திலும், ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியிலும் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் இருந்து ஒதுங்கி, திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், திடீரென கேஜ்ரிவாலை சந்தித்திருப்பது பரபரப்பான ஒன்றாக பார்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சரியான தலைமை இல்லாத நிலையில், இந்த சந்திப்பு நடந்திருப்பதால் இந்தப் பரபரப்பு எழுந்துள்ளது. முன்னதாக, தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று தேநீர் விருந்தளித்தார். நடிகர்கள் கமல் ஹாசன், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அமலா நாகார்ஜுனா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், தொழிலதிபர் அணில் அம்பானி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், இந்த திட்டத்துக்கு வலுசேர்க்கும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சிறப்பு விருந்தினர்களின் கருத்துகளை, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கேட்டறிந்தனர். அப்போது, பிரதமர் மோடி, இத்திட்டத்திற்கான தூதர்கள் தங்களின் ஆளுமையை முழுமையாக பயன்படுத்தி, தூய்மை இந்தியாவை பிரபலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்வில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான கையேட்டின் முதல் பிரதியை பிரணாப் முகர்ஜியிடம் வழங்கினார். அத்துறை இணை அமைச்சர் பாபுலால் சுப்ரியோ திட்டத்தின் சிறப்புகள் குறித்து தூதர்களிடம் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சௌரவ் கங்குலி, முகம்மது கைஃப், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் அருண் பூரி, ராமோஜி ராவ், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, எழுத்தாளர் சேத்தன் பகத், வடகிழக்கு தில்லி தொகுதி மக்களவை பாஜக உறுப்பினர் மனோஜ் திவாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கேஜ்ரிவாலை சந்தித்த கமல்ஹாசனால் தொற்றிக் கொண்ட பரபரப்பு
Popular Categories


