மும்பை: மும்பையில் கடந்த 2006-ஆம் ஆண்டில் ரயில்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக, நீதிமன்றம் இன்று 12 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, தீர்ப்பு கூறியுள்ளது. இவர்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். மும்பை பயணிகள் ரயில்களில் வெடித்த 7 குண்டுகளில் சிக்கி 180க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் லஸ்கர்-இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரே இந்தத் தாக்குதல்களை நடத்தியிருந்ததாக இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. இருப்பினும், பாகிஸ்தான் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு குற்றம் சுமத்தப் பட்டிருந்த 12 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. இவர்கள் மீது, தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல், சதித்திட்டம், கொலைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், இவர்கள் 12 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இவர்களுக்கான தண்டனைகள் வரும் 14-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மும்பை ரயில் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12 பேர் குற்றவாளிகள்: தீர்ப்பு
Popular Categories


