மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காமராஜர் அரங்கில் திரையுலகினர் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இதில் திரையுலகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினியும் கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது: கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுகளில் எவ்வளவு சோதனைகள், சூழ்ச்சிகள். எல்லாவற்றையும் வென்று திமுக தலைவராக இருந்தவர். இவரால் அரசியலுக்கு வந்தவர்கள் லட்சம் பேர். என்னுடன் நட்பு கொள், இல்லையென்றால் என்னை எதிரியாக்கி கொள் என தமிழகத்தில் அரசியல் சதுரங்கம் செய்தவர்.
அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு, திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். ஏனென்றால், அதிமுக., உருவானதே கருணாநிதியால் தான். எம்ஜிஆர்., சிவாஜி இருவரையும் சூப்பர் ஸ்டாராக்கியவர் என்றார்.



