லட்சத்தீவு பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் (பிரதீப் ஜான்) தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை கடந்த மே 29ஆம் தேதி தொடங்கி, முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. இந்த 4 மாதங்களில் கர்நாடக, கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்தது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழைப் பொழிவு இருந்தது. தற்போது ஒவ்வொரு மாநிலமாக தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை 5ஆம் தேதி அல்லது அதற்குப் பின் உருவாக உள்ளது. மேலும், வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் (பிரதீப் ஜான்) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டிருக்கும் வானிலைத் தகவல்களில் சில…
5ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது.
அதன்பின் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மெல்ல நகர்ந்து தாழ்வு மண்டலமாக மாறி அது ஓமன் கடற்பகுதியை நோக்கிச் செல்லும். இதனால் கிழக்கில் இருந்து வரும் காற்று இழுக்கப்பட்டு அதிகமான மழை கிடைக்கும்.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களும் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புண்டு.
அதேநேரம் தெற்கு வங்கக் கடல், இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவும் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்துசென்றபின், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால் அடுத்தடுத்து வரும் நாட்களும் மழை பெய்யும். நாளை முதல் தொடங்கி அடுத்து 5 நாட்கள் வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.
தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். வட மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மழை இருக்கும். சில மாவட்டங்களில் காலையில் பெய்தால், சில மாவட்டங்களில் மாலையும், சில இடங்களில் இரவிலிருந்து அதிகாலை வரையும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
சென்னையில் இரவு தொடங்கி அதிகாலை நேரங்களில் மழை இருக்கும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகர்வைப் பொறுத்து காலை நேரத்தில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.