6-வது புரோ கபடி லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், மும்பை, தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தா, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் சென்னை, சோனிபட், புனே, பாட்னா, நொய்டா, மும்பை, ஆமதாபாத், டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் கொச்சியிலும், இறுதிப்போட்டி மும்பையில் ஜனவரி 5-ந் தேதியும் நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அடுத்து எதிர்பிரிவில் உள்ள அணிகளை ஒரு முறை சந்திக்க வேண்டும். மேலும் எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வைல்டு கார்டு சுற்றில் விளையாட வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாடும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
தொடக்க சுற்று லீக் ஆட்டங்கள் சென்னையில் இன்று முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. சென்னையில் இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் -பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணியும், 2-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன்-மும்பை (இரவு 9 மணி) அணியும் மோதுகின்றன.




