பாஜக ஆபத்தான கட்சி என நினைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஏழு தமிழர்களை விடுவிக்கும் கோப்பு குடியரசுத் தலைவர் கவனத்துக்குக் கொண்டு போகப் படாமலேயே திருப்பி அனுப்பப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த ஏழு பேர்? எனக்கு தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் எதிர்க் கேள்வி எழுப்பினார். மேலும், தாம் இப்போதுதான் திரும்பி வருவதால் அதுகுறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதில் தவறு நிகழ்ந்துவிட்டதாகவும் ரஜினி தெரிவித்தார். மேலும் பா.ஜ.க ஆபத்தான கட்சி என்று நினைப்பதால் எதிர்கட்சிகள் ஒன்று சேர்வதாகவும் ரஜினி தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றி, உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் ரஜினி வலியுறுத்தினார்.
கேள்வி: பணமதிப்பிழப்பு கொண்டு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது ; உங்கள் கருத்து?.
ரஜினிகாந்த்: பண மதிப்பிழப்பை நடைமுறைப்படுத்தியதில் தவறு இருந்தது; அது விரிவாக பேச வேண்டிய விஷயம்.
கேள்வி: பாஜகவை எதிர்த்து மிகப்பெரிய கூட்டணி உருவாக்க நினைக்கிறார்கள். பாஜக அவ்வளவு ஆபத்தான கட்சியா?.
ரஜினிகாந்த்: பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள்; அப்போது கண்டிப்பாக அப்படித்தானே இருக்க முடியும்.