திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. பின்னர், சிலைதிறப்பு விழா பொதுக்கூட்டத்தில் “சூரியன் மறைவதில்லை” எனும் விழா மலரை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வெளியிட திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற சிலை திறப்புவிழா பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பிணராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பேசினர்.
கருணாநிதி தான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். இந்தியாவில் சமூக நீதி மலர்வதற்கு பாடுபட்டவர்களில் கருணாநிதிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. தமிழ் வளர்ச்சிக்காக கருணாநிதி ஆற்றிய தொண்டுகள் ஈடு இணையற்றது. தமிழக மக்களுக்காக அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. பேச்சாற்றலின் வலிமையை நன்கு உணர்ந்தவர் கருணாநிதி என்
மேலும், திமுக எப்போதும் அகில இந்திய அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின்
40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்! கருணாநிதி விட்டுச் சென்ற பாதையை கடைபிடிப்பது தான் அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைமாறு- என்று பேசினார் கேரள முதல்வர் பிணராயி விஜயன்.
சமூக வளர்ச்சியுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியை முக்கியம் என கருதியவர்; குடிசை மாற்று வாரியம் கண்ட முதல் தலைவர்; எழுத்தாளராகவும் அரசியல்வாதியாகவும் ஒரே நேரத்தில் பரிணமித்தவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்த முதல் முதலமைச்சர் என சிலை திறப்பு விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
தென் பாரதமே பெருமை கொள்ளும் நாள் இது என தமிழில் உரையை தொடங்கினார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
நாடு போற்றும் அரசியல் தலைவர்; நீண்டகால அரசியல் அனுபவம் பெற்று இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு 50 ஆண்டுகளும் கட்சித் தலைவராக இருந்தவர். தேர்தலில் தோல்வியை சந்திக்காத வேட்பாளராக இருந்தவர்!
தமிழகத்தின் எதிர்கால சந்ததியினர் பெருமை கொள்ளும் விதத்தில் தமிழகத்தை கட்டமைத்து தந்தவர்; சக்தி வாய்ந்த மாநிலம் சக்திவாய்ந்த நாட்டை உருவாக்கும் எனக் குறிப்பிட்டவர்!
தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயக்குகிறார்கள். அந்த ரிமோட் தில்லியில் உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தையே முற்றிலும் சிதைத்து விட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசு அனைத்து துறைகளையும் சீரழித்து விட்டது. மத்திய அரசிடம் இருந்து ஏதாவது ஒரு நன்மையை மக்கள் பெற்றுள்ளனரா? என்று சந்திரபாபு நாயுடு பேசினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசியபோது, நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவானாகத் திகழ்ந்த தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன். இந்த நாளில் அவரின் வாழ்க்கையை அவரின் வரலாற்று சாதனைகளை நினைவு கூர்ந்து மகிழ்கிறேன்.
தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்து தமிழகத்தை நிர்வகித்தவர். தமிழக சட்டமன்றத்திற்கு 13 முறை போட்டியிட்டு தோல்வியே காணாதவர். தமிழை செம்மொழியாக அறிவித்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி.
தமிழ் மீது தீராப்பற்று கொண்ட காரணமாக நாவல்கள், சிறுகதைகள், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் கலைஞர். தன்னுடைய உடன்பிறப்புகளே 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார். மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அறிவித்தார்.
பெரியார் அண்ணாவைப்போல கருணாநிதியும் சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர். மதச்சார்பற்ற அரசியல்வாதியான கருணாநிதியை காங்கிரஸ் கட்சியினர் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று பேசினார் சோனியா காந்தி.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, மக்களுக்காக வாழ்ந்து, மக்களின் குரலாக ஒலித்து, மக்களின் வலியை தாங்கிய தலைவர். மிக நீண்ட காலம் அரசியலில் இருக்கும் ஒரு தலைவரின் இல்லம் மிக எளிமையாக இருந்தது. அவரது இல்லத்திற்கு முதல்முறை சென்றபோது இதைக்கண்டு வியந்துபோனேன் நான்.
அவரது எளிமையும், அகங்காரம் இல்லாத குணத்தையும் கண்டு அவரை எனக்கு வழிகாட்டியாக கருதினேன். இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைய விடமாட்டோம். கோடான கோடி மக்களின் எண்ணங்களை மத்திய அரசு மதிப்பதில்லை. வருகின்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பது நாட்டு மக்களின் கருத்தாக இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கி தேர்தல் ஆணையம் ஆகியவற்றையும் பாஜக சீரழித்துவிட்டது. நாட்டின் கலாச்சாரத்தை பண்பாட்டை மதிக்க வேண்டியதில்லை என நினைக்கும் அரசு மத்தியில் உள்ளது… என்று பேசினார் ராகுல் காந்தி.
முன்னதாக,, கருணாநிதி இல்லை என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் ஸ்டாலின் என்று கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார். மேலும், கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் துரைமுருகன்.
கருணாநிதியின் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது, விழாவில் பங்கேற்றது பெருமையாக உள்ளது என்று நடிகர் ரஜினி செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.