‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ 4-ம் கட்ட பயணத்தின் 3-வது நாளான நேற்று மு.க.ஸ்டாலின் சென்னை முத்தமிழ் நகரில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், போக்குவரத்து, மாநகராட்சி, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்துரையாடினார்.
அப்பது மு.க. ஸ்டாலின்அவர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை எங்களை விடவும் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தான் உங்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க வந்திருக்கிறீர்கள். செயல்படாத இந்த அரசை வழியனுப்பி, மக்கள் உணர்வுகளை மதித்து கோரிக்கைகளை நிறைவேற்றும் பெரிய மாற்றம் தமிழகத்துக்கு தேவைப்படுகிறது.
இதற்கு வாய்ப்பு வருகிற சட்டமன்ற தேர்தல் தான். ஆகவே வருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும்.பிப்ரவரி மாதம் 12-ந் தேதிக்குள் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளேன். சென்னையை பொருத்தமட்டில் ஜீப், கார், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். ஆகையால் கலந்துரையாடல் நடத்துகிறேன்.
இந்த பயணத்தின்போது 4½ லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். பொதுமக்கள் தந்த கோரிக்கைகள், மனுக்கள் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு நிவர்த்தி செய்வதற்காக ஒரு பிரதி எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதேநேரத்தில் உறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவும் காத்திருக்கிறேன்.
ஆட்சி என்பது மக்களுக்கு பணியாற்ற காத்திருக்கும் தேர். அந்த தேர் செல்ல சக்கரத்தைப்போல பக்கபலமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய பணியாற்றுபவர்களும் அவர்கள் தான். அதேநேரம் அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
எதிர்கால சிற்பிகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அரசு ஊழியர்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களை யாருமே நிறைவேற்றவில்லை.பொங்கலுக்கு போனஸ் வழங்கும் திட்டம் முதன்முதலாக தி.மு.க. ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை கருணாநிதி தலைமையிலான அரசு நிறைவேற்றியிருக்கிறது. அரசு ஊழியர்களின் குறைகளை கேட்கக்கூட தற்போதைய அரசு தயாராக இல்லை.
மக்களுக்கு சேவை செய்கிறவர்கள் அரசு ஊழியர்கள். ஆகவே அரசு ஊழியர்களுக்கு உதவி செய்யும் அரசு இருந்தால் தான், மக்கள் நலப்பணிகளை நீங்கள் உற்சாகமாக செய்வீர்கள் என்பதில் தி.மு.க. தெளிவாக இருக்கிறது. ஆட்சியில் இல்லாத சமயத்தில் குறைகளை கேட்பதுபோல, பொறுப்புக்கு வந்த பின்னரும் அனைவரையும் அழைத்து குறைகளை கேட்கும் ஆட்சியை தி.மு.க. அமைக்கும் என்றார் .
மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது :-
ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது மகிழ்ச்சி அளித்தது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார்படுத்திய சூழலில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது அதிர்ச்சியளிக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டதைவிட அவசர சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும். விரைவில் அவசர சட்டம் கொண்டுவருவார்கள் என்று நம்புகிறோம்’
‘கடந்த தி.மு.க. ஆட்சியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிர்வாக ரீதியாக எதிர்கொள்வோம் என கூறினார்
Related News Post: