வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த தாயும், இரண்டு குழந்தைகளும் இறந்தனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அசோக்நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் சென்னையில் கண்டக்டராக பணி புரிந்து வருபவர்.
அவரது மனைவி திவ்யா, 26. மகன் நிதிஷ் கன்னா, 3. ஒன்றரை வயது மகள் அம்மு.
மனைவி திவ்யாவை, அவரது பெற்றோரிடம் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி சிவக்குமார் கொடுமை செய்து வந்தால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கடந்த வாரம், விண்டர் பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் திவ்யா சென்று விட்டார். இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன் மனைவியை சமாதானம் செய்து, வீட்டுக்கு சிவக்குமார் அழைத்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை, 3 மணிக்கு, அரக்கோணம் புது பேருந்து நிலையத்திற்கு சிவக்குமார் சென்றார். அப்போது, அவர்கள் வீட்டில் இருந்து புகை வருவதாக, அக்கம் பக்கத்தினர் சிவக்குமாருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
சிவக்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது, திவ்யாவும், 2 குழந்தைகளும் தீயில் எரிந்து கொண்டிருந்தனர். அங்கிருந்தவர்கள், மூவரையும் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு, இரவு, 9 மணிக்கு நிதிஷ் கன்னா இறந்தார். மற்றவர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு, இரவு, 12 மணிக்கு அம்மு இறந்தார். நேற்று மதியம், 2 மணிக்கு திவ்யா இறந்தார். திவ்யாவுக்கு திருமணமாகி, ஐந்து ஆண்டுகள் ஆவதால், ராணிப்பேட்டை உதவி மாவட்ட ஆட்சியர் முருகேசன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். அரக்கோணம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


