வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆம்பூரில் காவல் துறையினர் ஒரு வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் திரிபுரா மாநிலம் உன்னிகுட்டி மாவட்டம் கைலாஸ்கர் பகுதியை சேர்ந்த சையது இமாம் அலியின் மகன் சையது முகமது அலி (39) என்பது தெரியவந்தது.
இவன் டெல்லி, மும்பை உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதும், தீவிரவாதிகளுடன் அவனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாதி சையது முகமது அலி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மருத்துவமனை ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அங்குள்ள நீதிமன்றத்தில் தீவிரவாதி சையது முகமது அலியை நேரில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சையது முகமது அலியை, ஆயுதபடை காவல் ஆய்வாளர் லூர்து சாமி தலைமையிலான துப்பாக்கி ஏந்திய 6 காவலர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லக்னோவுக்கு ரெயிலில் அழைத்து சென்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் இட்டார்சி ரெயில் நிலையத்தை நேற்றிரவு ரெயில் சென்றடைந்தது. அப்போது ரெயிலில் காவலரின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்த தீவிரவாதி சையது முகமது அலி திடீரென தப்பி சென்றான். தீவிரவாதியை காணாமல் அதிர்ச்சியடைந்த காவலர்கள் ரெயில் நிலையம் முழுவதும் தீவிரமாக தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவன் பிடிபடவில்லை. மத்திய பிரதேச இட்டார்சி காவல் நிலையத்தினர் உதவியுடன் தமிழக காவல் துறையினர் தீவிரவாதியை பிடிக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளனர்.


