இரு சக்கர மோட்டார் வாகனத்தில் கைக்குழந்தைகளுடன் சென்ற இரண்டு இளம் பெண்களிடம் மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர் “நாங்க பெட்ரோல் வாங்கிக் கொடுத்து நீங்க தீ குளிச்சிட்டா? நாங்க என்ன செய்ய?” எனும் கேள்வியை எழுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்திய குடியரசு தினத்தையொட்டி நேற்று 26-01-2106 அன்று மதுரையில் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மேலும் காவல் ஆணையாளர் சைலேஷ் குமார் யாதவ் உத்தரவின்பேரில் மதுரை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8.15 மணியளவில் ஒபுலா படித்துறை பகுதியிலுள்ள காவல் சோதனை சாவடியில் எட்டுக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் அனைவரும் எவ்விதமான சோதனைப் பணிகளிலும் ஈடுபடாமல் அங்கு இருந்த இருக்கைகளில் அமர்ந்து சொந்தக் கதைகளை பேசிக்கொண்டு அரட்டை அடித்தவாறு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக இரண்டு இளம் பெண்கள் நகைகள் நிறைய அணிந்து கொண்டு கைக்குழந்தைகளுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு ஒரு இரண்டு சக்கர மோட்டார் வாகனத்தில் ஒன்றாக சேர்ந்து வீட்டிற்கு செல்ல திரும்பிக் கொண்டு இருந்தினராம். எதிர்பாராதவிதமாக அவர்களுடைய வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து செய்வதறியாமல் விழி பிதுங்கி நடு ரோட்டில் தவித்துள்ளனராம்.
அப்போது சோதனை சாவடியில் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த ஒரு காவலர் அந்த இளம் பெண்களிடம் “எதற்காக நடு வழியில் இங்கு நின்று கொண்டு உள்ளீர்கள்? என வினா எழுப்பியுள்ளார். அதற்கு அந்த இளம் பெண்கள் வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்த விபரத்தையும், அவர்களது வீடு நெடும் தொலைவில் உள்ளதால் அவர்களுக்கு உதவி செய்ய எவரும் இல்லை எனக் கூறினார்களாம்.
அதைக் கேட்ட மற்றொரு காவலர் எழுந்து வந்து வினா எழுப்பிய காவலரைப் பார்த்து “வாங்க நீங்க பாட்டுக்கு சொல்லிகிட்டு இருந்த கதையை நடுவிலேயே நிறுத்திவிட்டு ஏன் அந்த பெண்களிடம் பேசிகிட்டே இருக்கீங்க? நாங்க எல்லோரும் காத்துகிட்டு இருக்கோம். அந்த கதை ரொம்ப சீரியஸா இருக்கு. வந்து கதையை தொடர்ந்து சொல்லுங்க” என்று கூறினாராம்.
மேலும் கதையை சொல்லச் சொன்ன காவலர் அந்த இரண்டு இளம் பெண்களை பார்த்து, “உங்களுக்கு நாங்க பெட்ரோல் வாங்கிக் கொடுத்து அதை வாங்கி நீங்க உடனே இங்கு தீ குளிச்சிட்டா? பழி எங்க மேல விழுந்திடும்” என்று கூறிவிட்டு கதை சொன்ன காவலரை அழைத்துக் கொண்டு சென்று விட்டாராம்.
பணிநேரத்தில் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த காவலர்களிடம் எந்த விதமான உதவியும் செய்ய அந்த இரண்டு இளம்பெண்களும் வேண்டுகோள் வைக்காத நிலையில் அவர்களை பார்த்து அநாகரீகமான முறையில் மனது புண்படும்படியான “தீ குளிச்சிட்டா?” என்ற கேள்வியை காவல் துறையில் பணியாற்றுபவர் எப்படி கேட்கலாம் என அவர்கள் இருவரும் புலம்பிக் கொண்டே இருந்தார்களாம்.
மேலும் இளம் பெண்கள் அணிந்திருந்த நகைளை எவரேனும் வழிப்பறி செய்து கொண்டு சென்றால் கூட அரட்டை அடித்து கொண்டு இருந்த காவலர்கள் அவர்களை பிடிப்பார்களோ! எனும் பயத்துடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த நடு ரோட்டில் காத்து இருந்தனராம். நீண்ட நேரத்திற்குப்பின் ஒரு பெண்ணின் கணவரின் நண்பர் பெட்ரோல் பாட்டில் வாங்கி வந்து அவர்களுக்கு உதவி செய்த பின் அவர்கள் அந்த இடத்தில் இருந்து கிளம்பி சென்றனராம்.
காவல் துறை பொதுமக்களின் நண்பன் என்று தொடர்ந்து கூறிக் கொண்டு எந்த உதவியாக இருந்தாலும் பொதுமக்கள் எப்போதும் எங்களை அழைக்கலாம் என்பதை மார்தட்டிக் கொண்டு தம்பட்டம் அடித்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு ஏற்ப காவல் துறையில் மனிதாபிமான அடிப்படையில் சில நேர்மையான அதிகாரிகள் பொது மக்களுக்கு உதவி செய்து பணியாற்றிக் கொண்டுதான் வருகிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
காவல் துறையில் காக்கி உடை அணிந்து காட்டுதர்பார் செய்து கொண்டு சுயநல நோக்கத்தில் தன்னிச்சையாக பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அராஜகமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு பெரும்பாலானோர் பணியாற்றி வருவது தொடர்கதையாகத்தான் உள்ளது எனும் என்ணம் அனைவர் மத்தியிலும் உள்ளது.
காவல் துறையில் பணிநேரத்தில் அரட்டை அடித்துக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில்கூட பொதுமக்களுக்கு உதவி செய்ய முன் வராமல் மனதும் புண்படும்படியாக பேசுவோர் இருந்தால் அவர்களால் காவல் துறைக்கு நற்பெயரா கிடைக்கும் ?


