இந்தியா முழுவதும் 67-வது குடியரசு தினம் நேற்று சிறப்பாக கொண்டாடபட்டது. திரிபுரா மாநிலம் தர்மாநகரில் பிபிஐ மைதானத்தில் நடந்த குடியரசி தினவிழாவில் மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஜிதா நாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், உங்கள் அனைவருக்கும் 67-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். குடியரசு தின வாழ்த்துக்கு பதில் அமைச்சர் சுதந்திர தின வாழ்த்து கூறியதால் விழா அரங்கில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் மத்தியில் கேலி சிரிப்பலை எழுந்தது. என்றாலும் அமைச்சர் பிஜிதாநாத் அதை கண்டு கொள்ளாமல் உரையாற்றினார். அப்போது அவர் மீண்டும் மீண்டும் 3 தடவை சுதந்திர தின விழா என்றே குறிப்பிட்டார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தலைவர் கள் பெண் அமைச்சர்பிஜிதாநாத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்கா கூறுகையில், ‘‘கல்வியறிவு இல்லாத ஒருவரை அமைச்சர் ஆக்கியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசமைப்பு பற்றி அடிப்படை தெரியாதவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
திரிபுரா மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரினாள் காந்தி கூறுகையில், ‘‘குடியரசு தின விழாவுக்கும் சுதந்திர தின விழாவுக்கும் வித்தியாசம் தெரியாத பெண் அமைச்சருக்கு அமைச்சரவையில் பெரிய பொறுப்பு கொடுக்கப் பட்டிருப்பது சரியானது அல்ல. அமைச்சர் பிஜிதா தன் தவறுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்


