மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரி, பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கத் தலைவர் சொக்கலிங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தார்.
அந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு ஏற்கனவே விசாரித்தது. மேலும் ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு உள்ளதா என தமிழக அரசு பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளிக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்யாததால், மேலும், இரண்டு வாரத்தில் அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும்,தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் இரண்டாவது முறையாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்து அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


