சென்னை:
மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும். உங்கள் கோரிக்கைகளை என்னிடம் கூறிவிட்டு, படிப்பை தொடருங்கள் என்று கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் குறைந்துவிட்டதாகவும், தமிழகம் அமைதிப் பூங்காவாக நடைபோடுகிறது என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறிய போதிலும், கொலை நடக்காத, கொள்ளைகள் நடக்காத நாளே தமிழகத்தில் கிடையாது. குறிப்பாக இந்த ஆட்சியில் தற்கொலைச் செய்திகள் என்பது வந்து கொண்டே இருக்கிறது.
திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி விழுப்புரம் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டு மறைந்த அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு, அந்த மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியினை நான் அந்த பெண்ணின் தாயாரிடம் வழங்கிய போது, அந்தப் பெண்மணி என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘அய்யா எனக்கு என் பெண் வேண்டும், எனக்கு நீதி வேண்டும்’’ என்று கூறி கதறிய அந்தக் காட்சி தான் இன்னமும் என் நினைவில் ஓடுகிறது. அந்தப் பெண்மணிக்கு என்னால் அங்கே பதில் கூற முடியவில்லை.
மாணவிகள் தற்கொலை தான் செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றிலே வீசப்பட்டார்களா? அதைக் கண்டுபிடிக்க முறையான சட்டப்படியான ஒரு நீதி விசாரணையை நடத்த இந்த அரசு முன் வராததற்கு என்ன காரணம்?
கடந்த ஆண்டு எத்தனை தற்கொலைகள்? மாணவிகள் மட்டுமல்ல. அரசில் பணியாற்றிய முத்துக்குமாரசாமி என்ற மூத்த அதிகாரி, ரெயில் முன் விழுந்து மாண்டு போனாரே? கண்துடைப்புக்காக அ.தி.மு.க. அரசு ஒரு அமைச்சரைக் கைது செய்து வழக்குப் போட்டதே தவிர, அந்த வழக்கு எந்தக் குப்பைக் கூடையிலே கிடக்கிறது?. விஷ்ணுப்பிரியா என்ற காவல்துறை அதிகாரி, தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனாரே, என்னவாயிற்று அந்த வழக்கு? எங்கே துங்குகிறது?.
2014-ம் ஆண்டு மொத்த தற்கொலை என்ற கணக்கைப் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்திலும், மகாராஷ்டிரம் 2-வது இடத்திலும், மேற்கு வங்கம் 3-வது இடத்திலும் இருந்திருக்கிறது.
மாணவச் செல்வங்களே உங்களை நம்பி இந்த நாடு மட்டுமல்ல. உங்கள் பெற்றோர், உங்கள் குடும்பத்தினர், உங்கள் சகோதர-சகோதரிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் படித்து முடித்து, அவர்களையெல்லாம் வாழ வைப்பீர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை தயவு செய்து நீங்கள் தகர்த்து விடாதீர்கள்.
தமிழகத்திலே உள்ள மாணவச் செல்வங்களையெல்லாம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கோரிக்கைகளை எல்லாம் என்னிடம் கூறிவிட்டு, நீங்கள் உங்களது படிப்பைத் தொடருங்கள். தமிழகத்திலே இனிமேல் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மாணவர்களைப் போலவே தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் குடும்பத்தினரின் வருங்காலத்தை எண்ணிப் பார்த்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கை விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


