வியாபாரியிடம் 123 பவுன் நகை, ரூ.25 லட்சம் பணம் கொள்ளை: முகமூடி கும்பல் கைது

Published:

திட்டக்குடி:

திட்டக்குடி அருகே நகைக்கடை வியாபாரியை வழிமறித்து 123 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சத்து ஆயிரத்து 50 ரொக்கத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இவ்வழக்கில் பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸார் இதுகுறித்து தெரிவித்ததாவது:

விழுப்புரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 59). மொத்த நகை வியாபாரம் செய்து வரும் இவர் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள நகை வியாபாரிகளுக்கு நகைகளை விற்பனை செய்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் ஜெயராமன் தனது காரில் விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு சென்று நகைகளை வழங்கினார். பின்னர், மீதமுள்ள 123 பவுன் நகைகள் மற்றும் கடைகளில் வசூலித்த ரூ.25 லட்சத்து ஆயிரத்து 50 ரொக்கத்துடன் விழுப்புரம் நோக்கி காரில் புறப்பட்டார். காரை திருக்கோவிலூர் அருகே உள்ள டி.எடையார் பகுதியை தயாளன் மகன் ஜெய்ஹிந்த் (22) என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.

ராமநத்தத்தை அடுத்துள்ள அரங்கூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இருந்து வேகமாக வந்த மற்றொரு கார் ஜெயராமன் சென்ற காரை முந்தி சென்று வழிமறித்து சாலையில் நின்றது. இதில் ஜெய்ஹிந்த் காரை உடனடியாக நிறுத்தினார்.

இந்நிலையில், முகமூடி அணிந்து 6 பேர் மற்றொரு காரில் இருந்து இறங்கினர். மேலும் அவர்கள் கையில் இரும்பு கம்பி, கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தனர். இதில் நிலைகுலைந்து நின்ற ஜெயராமன் சற்றும் எதிர்பாராத நேரத்தில், அவர்கள் காரின் முன்பகுதியை சேதப்படுத்தி காரில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது ஜெயராமன், சதீஷ் ஆகிய 2 பேரும் அவர்களை தடுத்தனர். ஆனால் அந்த கும்பல் அவர்களை தாக்கிவிட்டு காரில் இருந்த 123 பவுன் நகை, ரூ.25 லட்சத்து ஆயிரத்து 50 ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பினர்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

இது குறித்து ஜெயராமன் ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும், சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனிடையே திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையிலான போலீசார் சிறுபாக்கம்–சேலம் சாலையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, போலீசாரின் வாகனத்தை பார்த்தவுடன் ஒரு கார் வேகமாக சென்றது. இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்தனர். சினிமா பாணியில் அந்த காரை போலீசார் துரத்தி சென்று மடக்கினர்.

அப்போது, காரில் இருந்து தப்பி ஓட முயன்ற 6 பேரையும் போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்த போது, காரில் ஜெயராமனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நகை, பணத்தையும், கொள்ளையர்கள் வந்த காரையும் கைப்பற்றினர். தொடர்ந்து, பிடிபட்ட 6 பேரையும் போலீசார் திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் விழுப்புரம் கோலியனூர் காலனியை சேர்ந்தவர்கள் கந்தன் (27), அன்பழகன் (23), ஆனந்த் (25), ஜெயராமன் (25), கடலூர் பழைய நகரை சேர்ந்த திலிபன் (27), தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் ஆனந்த் (24) என்பது தெரியவந்தது.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

போலீஸாரின் விசாரணையில் மேலும் சில தகவல்கள் தெரியவந்தன.

விழுப்புரம் நகை வியாபாரி ஜெயராமனிடம் பல ஆண்டுகளாக அன்பழகன் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேலையை விட்டு நின்று விட்டார். இந்த நிலையில், அன்பழகன் பணம், நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டு, அவருக்கு உதவியாக நண்பர்கள் 5 பேரையும் ஒன்று சேர்த்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயராமன் நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டார். இதைநோட்டமிட்ட அன்பழகன் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து ஒரு வாடகை காரில் ஜெயராமனை பின்தொடர்ந்து வந்தனர். இரவு 11.30 மணி அளவில் நகை கடைகளில் வசூலை முடித்துவிட்டு ராமநத்தம் அருகே சென்ற ஜெயராமன் காரை அவர்கள் வழிமறித்து தாக்கி பணம், நகையை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிப்பட்ட 6 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img