புதுதில்லி:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சி.கோஷ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் வரும் பிப்.2 முதல் இறுதி விசாரணை நடக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை பிப்.23ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் கோரப்பட்டது.
அந்த மனுவில், “அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனு பிப்ரவரி 1-ல் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான உத்தரவின் தாக்கம் அடுத்த சில நாட்கள் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் போன்ற வடிவில் எதிரொலிக்கலாம் என்பதால் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை வெள்ளிக் கிழமை இன்று விசாரித்த நீதிபதி பி.சி.கோஷ், ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


