தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்
உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு 10 மற்றும் +2 வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்தாலும், கல்வியின் தரம் குறைந்ததால் உயர்கல்விக்கு செல்லும் விகிதாச்சாரம் மிக மிக குறைந்துள்ளது. அதே ஆண்டில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழகத்தில் மட்டும் 118 பேர் தேர்ச்சியடைந்துள்ளார்கள் என பெருமை கொள்ளலாம். ஆனால் அவர்கள் அனைவருமே சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே பள்ளிப்படிப்பை முடித்தவர்கள். மேலும் 2015 ஆம் ஆண்டில் +2 வகுப்பில் தேர்ச்சியடைந்து ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டும், வெறும் 33 பேர் மட்டுமே அதில் தேர்ச்சியடைந்துள்ளனர். இதே நிலைதான் மருத்துவம் மற்றும் பட்டைய கணக்காளர் படிப்பிலும் உள்ளது. தேசிய கல்வித்தரத்திற்கு இணையாக 9, 10, +1, +2 பாடத்திட்டங்கள் தமிழகத்தில் இல்லை என்றும், அதனால் பள்ளிகல்வியின் தரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதென கடந்த 09.07.2015 அன்றே நான் அறிக்கையின் வாயிலாக சுட்டிக்காட்டியிருந்தேன். தற்போது அது உண்மையாகி இருக்கிறது.
மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் கல்வித்துறையில் நல்லபல ஆலோசனைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், சமீபத்தில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக்கல்வித்துறை குறித்து மிகப்பெரிய ஆய்வை நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஆங்கிலம், கணக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளதென்றும், தேர்ச்சி விகிதத்தில் இந்திய சராசரியைவிட தமிழ்நாட்டின் சராசரி மிக மிக குறைவாக உள்ளதென்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக மாணவ, மாணவியர்கள் ஆங்கில பாடத்தில் 2 சதவிகிதமும், கணித பாடத்தில் 4 சதவிகிதமும், அறிவியல் பாடத்தில் 2 சதவிகிதமும், சமூக அறிவியலில் 4 சதவிகிதமும் என மிக மிக குறைந்த எண்ணிக்கையிலேயே சரியான விடையை அளிக்கிறார்கள் எனவும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஏனெனில் மத்திய அரசு நிறுவனத்தால் இந்தியா முழுவதும் 7,216 பள்ளிகளில் சுமார் 2,76,416 மாணவ, மாணவியர்களிடம் பல வினாக்களை கேட்டறிந்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 280 பள்ளிகளில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர்கள் பாடங்களில் உள்ள பொருளை புரிந்து கொள்ளாமலும், அதுகுறித்து தெரிந்துகொள்ளாமலும், ஆர்வமற்ற தன்மையோடும் இருப்பதால்தான் இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து நடைபெற்ற ஆய்வில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு, எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால் அதை மாற்றியமைத்திட அதிமுக அரசு எவ்வித முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.
தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சியடைய வைப்பதென்பது வரவேற்கக்கூடியது. ஆனால் அதே சமயத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து செல்லும் மாணவ, மாணவியர்கள், மேல் வகுப்பிற்கு சென்று கல்வி கற்கும் வகையில் அவர்களின் திறமையை வளர்ப்பதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா? இல்லையா? அதை செய்திருந்தால் இந்த நிலையை தவிர்த்திருக்கலாம் அல்லவா? 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த காலத்தைவிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தற்போதைய ஆட்சியில், 10 மற்றும் +2 வகுப்பில் அதிக அளவு மாணவ, மாணவியர் தேர்ச்சியடைந்தனர் என தமிழக மக்களுக்கு காண்பிக்கும் வகையில், ஒரு மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதை உண்மையாக்கும் விதமாகவே மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்தின் ஆய்வு அறிக்கை அமைந்துள்ளது.
மேலும் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழில் பிழை இல்லாமல் வார்த்தைகளை எழுதுவதற்கு தெரியவில்லை என்றும், ஆங்கில எழுத்துக்களையே எழுத தெரியவில்லை என்றும் கல்வியாளர்கள் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. உண்மை நிலையை மறைத்து, தனது சுயலாபத்திற்கும், ஆட்சியாளர்களின் விளம்பரத்திற்காகவும் தமிழகத்தில் தேர்வு எழுதியயவர்கள் 10ஆம் வகுப்பில் 92.9 சதவிகிதமும், +2 வகுப்பில் 90.6 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றனர் என்ற புள்ளி விபரத்தை மட்டுமே கூறி அதிமுக அரசு சுய தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. கல்வியின் தரத்தைப் பற்றியும், ஏழை மாணவ, மாணவியரை பற்றியும் கவலைப்படாமல், இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமல், வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையையே அழிக்கும் போக்கில் இந்த அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 9, 10, +1, +2 ஆகிய வகுப்பு பாடத்திட்டங்கள் அகில இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை, அதற்குரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை, பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் மற்றும் போதுமான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லை என பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் வாயிலாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் பள்ளிக்கல்வித்துறையின் அவலம் குறித்து கடும் விமர்சனத்தை அவ்வப்போது தெரிவித்துவருகிறார்கள். தமிழக அரசின் கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு, இரண்டு முறை ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டும் இந்த அரசு திருந்தியபாடில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இதையெல்லாம் வழக்கம்போல பொருட்படுத்துவதே இல்லை. தமிழகத்தில் மதுக்கடைகளை மூடமாட்டோமென, சட்டமன்றத்திலேயே ஆணவத்துடன் கொக்கரிக்கும் அதிமுக அரசின் செயலால், மூன்று தலைமுறை மக்களையும் சீரழித்துவரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறையையும் பாழ்படுத்தி வருகிறதென்பது மத்திய அரசு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை மூலம் “உள்ளங்கை நெல்லிக்கனியாக” தெரிகிறது.
மேலும் இந்த ஆய்வு அறிக்கையில் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ பாடதிட்டங்களில் பள்ளிக்கல்வித்தரம் சிறப்பாக உள்ளதென்றும், மாநில அரசின் பாடதிட்டம்தான் மிகவும் மோசமாக உள்ளதென்று கூறியுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது அதிமுக அரசுக்கு, தமிழக மக்களின் மீது அக்கறை இருப்பதாக தெரியவில்லை. மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கவேண்டும் என்கின்ற பேராசையும், சுயநலமுமே தெரிகிறது. எனவே தமிழக மக்கள் இனியாவது விழித்துக்கொண்டு நல்லாட்சி அமைய உறுதுணையாக இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்ட முறைகளே தொடர்ந்தால், தமிழக மாணவ, மாணவியரின் முழுத்திறமையும் வெளிப்படாது. “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி” என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வரிகளை மனதில்கொண்டு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்த பிறகு 10 மற்றும் +2 வகுப்பில் தேர்ச்சி சதவிகிதம் அதிகம் என புள்ளிவிபரங்கள் அளிப்பதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி, அரசியல் காழ்புணர்ச்சியின்றி, சிறந்த கல்வியாளர்களும். சமூக சேவகர்களையும் கொண்ட குழுவை அமைத்து, அவர்கள் மூலம் உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்


