ஆட்சிக்காலம் முடிவடைய நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ள நிகழ்வு, புரியா மக்கள் காதுகளில் பூ சுற்றுகிற வேலை என்று திமுக தலைவர் மு .கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியியுள்ளார்.
மேலும் கேள்வி பதில் அறிக்கையில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளதாவது :-
கேள்வி : முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
பதில் : அமைச்சரவைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்று இடைக்கால நிதிநிலை அறிக்கை பற்றி விவாதித்துள்ளது. ஆனால் அமைச்சரவைக் கூட்டம் என்பதே கடந்த சில மாதங்களாக நடை பெறவே இல்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21–ம் தேதி அன்று அமைச்சரவைக் கூட்டம், வெறும் 20 நிமிட நேரமே நடைபெற்ற பிறகு தெரிந்தவரையில் ஆறு மாத காலமாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளின் கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவே இல்லை. முதலமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் காணொலிக் காட்சிகள் வாயிலாக ஏதாவது ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதாக, புகைப்படம் எடுத்து ஏடுகளுக்கு விநியோகம் செய்வதைத் தான் முதலமைச்சரின் பணி என்று கருதப்படுகிறது. ஆட்சி முடிகிற போது, அடிக்கல் நாட்டு விழா நடத்தினால், அது எப்போது பயன்பாட்டுக்கு வரும்? தமது ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது என்று சொல்லிக்கொள்வதற்காகத்தான் இதைச் செய்கிறார்கள்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக் கழகத்துக்கு பத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை நியமிக்காமல் காலம் கடத்தப்பட்டு, தற்போது ஆட்சி முடியப்போகிறது என்றதும் அவசர அவசரமாக 11 பேரை தேர்வாணைய உறுப்பினர்களாக நியமித்திருக்கிறார்கள். அதிலும் பாதி பேர் அ.தி.மு.க. வழக்குரைஞர்கள். செய்தித் துறையிலே தற்போது செயலாளராக இருப்பவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக அ.தி.மு.க. அமைச்சர்களில் ஒருவரைப் போல பணியாற்றியவரை, நன்றிக் கடனாக தேர்வாணையக் கழகத்தில் நியமித்திருக்கிறார்கள்.
கேள்வி : முதலமைச்சர் ஜெயலலிதா ஏழு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறாரே?
பதில்: புரியாத மக்கள் காதுகளிலே பூ சுற்றுகின்ற வேலைதான். ஏழு திட்டங்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியிருக்கிறார். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு வரப்போவதாக ‘‘கதை’’ விட்டது என்னவாயிற்று என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் கேட்கின்றனவே, அவர்கள் வாயை அடைப்பதற்காக, 7 திட்டங்களுக்கு அடிக்கல் என்கிறார்களே தவிர வேறொன்றும் அல்ல.
கேள்வி: அரசு அதிகாரிகள் நான்கு பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியே ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்திருக்கிறாரே?
பதில் : அ.தி.மு.க. அரசுக்கு எதிராக இது போன்ற தீர்ப்புகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முதல் மற்ற நீதிபதிகள் வரை பல முறை விதித்த போதிலும், அதைப்பற்றி முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ கவலைப்படுவதாக இல்லை. இதையெல்லாம் தங்களுக்குக் கிடைத்த பாராட்டாக அல்லது அரசின் சாதனையாக எடுத்துக் கொள்வார்களோ என்னவோ?
கேள்வி : திருமலை நாயக்கர் பிறந்த தினத்தையொட்டி ஜனவரி 24–ம் தேதியன்று மதுரையில் அரசு விழா நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?
பதில் : கடந்த ஐந்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சிதானே நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஏன் இந்த அறிவிப்பு வரவில்லை? இந்த ஆண்டு தேர்தல் வருகிறது என்றதும் இந்த அறிவிப்பைச் செய்கிறாரோ?
கேள்வி : அ.தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களிடமிருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா?
பதில் : அ.தி.மு.க. ஆட்சி ஐந்தாண்டுகளுக்கு முன் நியமித்த புதிய தலைமைச் செயலகம் குறித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. கால நீடிப்பு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அண்மையில் கூட அந்தக் கமிஷனுக்கு மூன்று மாத கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அது போலவே, தர்மபுரி மாவட்டத்தில் மறைந்த தலித் இளைஞன் இளவரசனின் மரணம் குறித்து 2013–ம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் முடிவும் வெளிவரவில்லை. அந்தக் ஆணையத்துக்கும் அ.தி.மு.க. அரசு ஆறு மாதங்கள் நீடிப்பு வழங்கியிருக்கின்றது. இவ்வாறு விசாரணைக் ஆணையத்துக்கு கால நீடிப்பு கொடுப்பதால், மக்களின் வரிப்பணம்தான் வீணாவதாகச் செய்திகள் வந்துள்ளன.
கேள்வி : திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் 6,376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனல் மின் திட்டத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியதாக செய்தி வந்திருக்கிறதே?
பதில்: 110–வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் பல்வேறு மின்சாரத் திட்டங்களை அறிவித்த போது, 2015–ம் ஆண்டு இத்திட்டம் உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறினார். ஆனால் 2016–ம் ஆண்டு தொடங்கிய பிறகும், அந்தத்திட்டம் உற்பத்தி தொடங்கவில்லை. குறிப்பாக 29–3–2012 அன்று ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் படித்த நீண்ட அறிக்கையில், ‘‘660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்பதை இந்தப்பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும். இந்த அனல் மின் திட்டம் 2015–ம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்’’ என்றார். இந்தத்திட்டத்தின் 15–12–2014 நிலை என்ன தெரியுமா? இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்ட கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் 2017–2018–ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதுதான் என்று கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியியுள்ளார்.


