சென்னை:
தமிழ்நாட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
கருணாநிதி எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:–
புதிய வெளிப்புற உள்கட்டமைப்புகள் விரிவாக்கம் மற்றும் புதிய பகுதிகளுக்கு இணைப்பு தொடர்பாக தாங்கள் மேற்கொண்டுவரும் ஆற்றல் வாய்ந்த நடவடிக்கைகளை நான் அறிந்துள்ளேன்.
சில சவால்களை எதிர்கொண்டு தாங்கள் மேற்கொண்ட சில குறிப்பிட்ட முயற்சிகள் சேவையை மேம்படுத்தியுள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ரயில்வே துறையை மேலும் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக உருவாக்குவதற்கு தாங்கள் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளிலும் தாங்கள் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்கள் தடைபட்டு நிற்பதை குறிப்பிடாவிட்டால் நான் என்னுடைய கடமையில் இருந்து தவறியவன் ஆவேன்.
இந்திய ரயில்வேயில் நீண்ட காலமாகவே தமிழ்நாட்டுக்கு அதற்குரிய பங்கு அளிக்கப்படாமலே இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிடுவதற்கு என் இதயம் வேதனை அடைகிறது.
அதற்கு நிதி பற்றாக்குறை, ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் சிக்கல்கள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் என்று அந்தத் திட்டங்களை கைவிடுவதற்கான நிரூபணங்கள் என்று காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றுக்கு தீர்வே இல்லையா என்பதில் நான் முழுமையாக மனநிறைவு அடையவில்லை.
சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை மூன்றாவது இருப்புப்பாதை சென்னை சென்டிரல்–பேசின்பிரிட்ஜ் 5 ஆவது மற்றும் 6 ஆவது இருப்புப்பாதைகள் அத்திப்பட்டு–புதூர் 88.3 கி.மீ. நீளமான புதிய இருப்புப்பாதை, சென்னை கடற்கரை – அத்திப்பட்டு நான்காவது இருப்புப்பாதை ஆகிய மேற்கண்ட திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே இணைப்புகளை மேம்படுத்தவும் அதன் மூலம் சென்னை புறநகர்ப் பகுதிகளில் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டவை. ஆனால் அவை இப்போது திரும்பப்பெறப்பட்டுள்ளன.
ரயில்வேயால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இதர முக்கிய திட்டங்கள் வருமாறு:–
கும்பகோணம்–திருவாரூர், ஓமலூர்–மேட்டூர் அணை, ஈரோடு–பழனி, ஸ்ரீபெரும்புதூர்–கூடுவாஞ்சேரி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி, பெங்களூரு–சத்தியமங்கலம், திண்டிவனம்–திருவண்ணாமலை, மதுரை–போடிநாயக்கனூர், மாமல்லபுரம் வழியாக சென்னை–கடலூர் மற்றும் திண்டிவனம்–நகரி ஆகியவையாகும்.
இவற்றுள் சில திட்டங்கள் 1996–1997 மற்றும் 1998–1999 ஆம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டவையாகும். இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு ஏற்ற நிலை சாத்தியமானதா என்ற ஆய்வுகள் தொடக்க நிலைப்பணிகள் அனைத்தும் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நிறைவு செய்யப்பட்டவையாகும்.
இத்தகையத் திட்டங்களை நிறுத்துவது எந்த அரசுக்கும் சரியானதாகாது. இது குழந்தையிடம் ஒரு பழத்தைக் காண்பித்துவிட்டு, அந்தக் குழந்தை மனம் வேதனையடையும் வகையில் அதைத் திடீரென்று மறைத்து வைப்பது போன்றதாகும்.
2004–2009 ஆம் ஆண்டு காலத்தில் ஈரோடு–பழனி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நானே தனிப்பட்ட முறையில் முயற்சிகளை மேற்கொண்டேன் என்று இங்கு நான் குறிப்பிட்டால் அது பொருத்தமற்ற இடத்தில் கூறிய கருத்தாகாது.
திருப்திகரமான முறையில் திட்டத்தைத் தொடங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட்ட பிறகு, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.
மேற்கண்ட திட்டங்களை எல்லாம் மீண்டும் தொடங்குவதற்கு அன்புடன் தாங்கள் கவனம் செலுத்தி, அவற்றுக்குப் புத்துயிர் அளிக்க, வரவிருக்கும் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தீவிரமாக நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டால் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைவதோடு தங்களுக்கு மிகுந்த நன்றியோடும் இருப்பார்கள்.
நான் தனிப்பட்ட முறையில் தங்களுடைய விரிவான கடிதத்திற்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.


