திண்டுக்கல்:
பழனி அருகே மது போதையில் அரசு பேருந்தை ஓட்ட முடியாமல் அந்த பேருந்தின் டிரைவர் ஸ்டியரிங்கில் சாய்ந்து தூங்கியதால் நடுவழியில் பயணிகள் தவித்தனர்.
பழனியிலிருந்து கள்ளிமந்தயம் கிராமத்திற்கு நேற்று மாலை அரசு பேருந்து புறப்பட்டு சென்ற போது, அந்த பேருந்தின் டிரைவர் தியாகராஜன், சிறிது தூரம் சென்ற நிலையில் பேருந்தை நடுவழியில் நிறுத்தினார். மேற்கொண்டு அவரால் பேருந்தை ஓட்ட முடியவில்லை,
அப்போது, அவர் மதுபோதையில் பேருந்தின் ஸ்டியரிங்கில் அவர் சாய்ந்து கிடந்தார். இதனால், பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டார். அப்போது, பேருந்தில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, பேருந்து கண்டக்டருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதையில் இருந்த டிரைவரை பேருந்தில் இருந்து கிழே இறக்கி, அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கண்டக்டர் உடனடியாக பழனி போக்குவரத்து பணிமனை அலுவலகத்திற்கு தகவல் கூறியுள்ளார். உடனடியாக மாற்று டிரைவர் மூலம் அந்த பேருந்து புறப்பட்டு சென்றது. போதை டிரைவர் தியாகராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


