காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ள “அனைவருக்கு மான அடிப்படைச் சம்பளம்” லோக்சபா தேர்தலில் போணி ஆகுமா?
அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம், அனைவருக்கும் அடிப்படைச் சம்பளம் என்ற பெயர்களில் (Universal Basic Income ) பல நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிறது.
பொதுவாக அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் வழங்க வழிவகை செய்வதே இதன் நோக்கம். சில நாடுகளில் வேலை பார்க்காதவர்களுக்கு கூட குறைந்த பட்ச தொகை (Minimum Income Guarantee) அளிக்கப்படும்.
இதனால் சம்பளம் வாங்காத நபரே இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும். விவசாயிகள் அதிக பலன் பெற வாய்ப்புள்ளது. வறட்சியில் இருந்தால் கூட குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அரசால் வழங்கப்படும். வேலையில்லாத பட்டதாரிகளும் இதனால் பலன் பெறுவார்கள்.
இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 1971 தேர்தல் பிரச்சாரமாக முன்வைத்த “கரீபி ஹடாவோ” (ஏழ்மையை அகற்றூவோம்) கோஷத்தின் நவீன வடிவமே ராகுல் அறிவித்தது.
திட்டத்தின் விதிகள் என்ன என்றோ, யாருக்கு எல்லாம் அடிப்படை சம்பளம் கிடைக்கும் என்றோ காங்கிரஸ் இன்னும் கூறவில்லை.
பாஜக இந்தத் திட்டத்தை தனது தேர்தல் வாக்குறுதியாக அளிக்க இருந்தது என்றும், இந்த பட்ஜெட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. பாஜகவை முந்திக்கொண்டு அதிரடியாக ராகுல் காந்தி தற்போது இதைக் கையில் எடுத்துள்ளார்.
ஆனால் மோடியின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் 2017 பொருளாதார அறிக்கையில் இடம் பெறச் செய்து இருந்த யோசனை தான் இது. ஆண்டு ஒன்றுக்கு 7,620ரூ என்ற வருமான வரம்பையும் அவர் கோடிட்டுக் காட்டி இருந்தார்.
மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 2011 முதல் நவம்பர் 2012 வரை யூனிசெப் உதவியுடன் “சேவா” (Self Employed Women’s Association (SEWA)) என்ற் அமைப்பு பரிசோதனை முறையில் இதைச் சில கிராமங்களில் செயல்படுத்திப் பார்த்தது.
அதே போல் டெல்லியில் 2011ல் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து மாதம் 1000 ரூபாய் தரப்பட்டது. குடும்பத் தலைவி கணக்கில் வங்கிகளில் உதவித் தொகை நேரடியாகச் செலுத்தப்ப்ட்டது.
இது குறித்த ஆய்வு முடிவுகளை “Unconditional Cash Transfers: Findings from Two pilot studies” என்ற அறிக்கையில் 2013 மே மாதம் “சேவா” அமைப்பு சமர்ப்பித்தது..
அனைவருக்குமான அடிப்படைச் சம்பளம் பற்றி “கய் ஸ்டாண்டிங்” (Guy Standing) என்ற பொருளாதார நிபுணர் ஒரு கருத்துருவாக்கம் செய்துள்ளார். (Basic Income: A Transformative Policy for India. )
அதில் அவர் “அடிப்படைச் சம்பளம் என்பது ஒரு வகையான சமூக நீதி” (basic income is a matter of social justice) என்கிறார். ராகுல் அறிவித்துள்ள திட்டம் பாஜகவின் 10% இடஒதுக்கீடு சட்டத்திற்கு பதிலடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இத னால் பாஜக vs காங்கிரஸ் என்பதை தாண்டி 10% இடஒதுக்கீடு vs குறைந்தபட்ச வருமானம் என்று மாறிவிட்டது என்றும் காங்கிரஸ் எண்ணுகிறது .
ஜாதி ரீதியாக இல்லாமல் ஏழையாக இருக்கும் எல்லோரும் இந்த பணம் கிடைக்கும் என்பதால் இது “மாஸ்டர் பொலிடிக்கல் ஸ்ட்ரோக்” என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் வாக்காளர்கள் புத்திசாலிகள்.
மயக்கு மொழிக்கு மட்டும் அவர்கள் தலையை ஆட்டி விட மாட்டார்கள் என்பது கடந்தகால வரலாறு!
- பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்