ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் போலீஸார், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளனர்
கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் பாமக., பிரமுகர் ராமலிங்கம், இஸ்லாமியர்களின் மதமாற்றத்தைத் தடுத்து வாக்குவாதம் செய்ததால் கைகள் வெட்டப்பட்டு படுகொலை செய்யப் பட்டார். இந்தக் கொலையில் 4 பேர் ஈடுபட்டனர் என்று கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கு உடந்தையாக இருந்த 5 பேர் போலீசாரால் கைது செய்யப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. ஏற்கெனவே நிஜாம் அலி சர்புதீன் முகமது ரியாஸ் முகமது அசாருதீன் முஹம்மது ரிஸ்வான் ஆகிய 5 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று முஹம்மது தவ்ஃபீக் முகமது பர்வேஸ் தவ்ஹீத் பாட்ஷா ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையினர் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதியரசர் குடியிருப்புக்கு அவர்களை அழைத்து வந்தனர்.
இன்று இரவு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்பு மூவரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து அவர்கள் மூன்று பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீஸார் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக மூவருக்கும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதை அடுத்து மூன்று பேரையும் திருச்சி சிறையில் அடைத்தனர்