காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப் பட்ட மனிதத்தன்மையற்ற கொடூரத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் 2,500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த போது, ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அவர்கள் விடுப்பில் சொந்த ஊர் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் தங்கள் பணியில் சேர வந்த வீரர்கள். அவர்கள் மீது நடத்தப் பட்ட இந்தத் தாக்குதல் அவர்களின் குடும்பங்களை சொல்லவொண்ணா துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சுமார் 350 கிலோ வெடிபொருட்களை கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பலருக்கு கை, கால்கள், உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தின் தூத்துக்குடி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக சி.ஆர்.பி.எப் அறிவித்துள்ளது.
இந்தக் கொடுரத் தாக்குதலுக்கு இந்திய மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். மதத்தின் பெயரால் நிகழ்த்தப் பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலுக்கு மறக்க இயலாத அளவுக்கு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கொந்தளித்து வருகின்றனர்.
அதிகம் உணர்ச்சி வசப்படும் சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்துகள் பலமாக எதிரொலிக்கின்றன. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை விட்டு விடவே கூடாது. மனிதத்தன்மையற்ற வகையில் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டு, மதத்தில் பெயரால் சுவர்க்கம் செல்வேன் என்று ஒருவன் பகிரங்கமாக குரல் கொடுக்கிறான் என்றால் அதை வேரோடி கிள்ளி எறியவேண்டும்! இந்திய ராணுவம் முழு மூச்சுடன் களத்தில் இறங்க வேண்டும் என்று தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி வருகின்றனர். உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பயங்கரவாத அமைப்புக்கும் அதன் தலைவன் மசூத் அசாருக்கும், இந்தத் தாக்குதலில் தான் சொர்க்கம் போவேன் என்று சொல்லி இந்தப் பாதகச் செயலைச் செய்த அடில் அஹமதுக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிரவாதக் கூட்டத்தை விடக்கூடாது, இவர்களுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து, அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறி வருகின்றனர்!
இதனிடையே, இந்தத் தாக்குதலைக் கண்டித்து இன்று காஷ்மீரில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனால், காஷ்மீரில் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள சேவைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டது.