தமிழக சட்டபேரவைக்கான கூட்டணி பேரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி வியூகங்கள் வகுப்பதில் முமுமுரமாக ஈடுபட்டுவருகின்றன. திமுகவைப் பொருத்தவரை காங்கிரஸுடனான கூட்டணியைஉறுதி செய்துள்ளது. தேமுதிகவிடம் பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறது. ஆனால் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இதுவரை கூட்டணி குறித்து வாய் திறக்கவில்லை. மேலும் மக்கள் நலக்கூட்டணி, பாஜக ஆகிய கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி அரசியல் களத்தை குழப்பி வருகிறார்.
இந்நிலையில் திமுக 200 இடங்களில் போட்டியிடவேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இணையப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. இந்த தேர்தலில் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும். வெறும் 5 சதவீதம் வாக்குகளே வைத்திருக்கும் தே.மு.தி.க.வுக்காக காத்து கொண்டிருக்கக்கூடாது. தி.மு.க. 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதோடு அவர் தனது கட்டுரையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார். அதில் 5 சத வீத வாக்குகள் என்பது வலிமையா என்றால், உறுதியாக இல்லை என்பதுதான் விடை. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த எந்த ஒரு கட்சியும், தமிழ்நாட்டில் அந்த 5 சத வீத வாக்குகளைக் கூடப் பெற்றிருக்கவில்லை என்பதால், அதுவும் அந்தக் கட்சிக்கான வலிமையாக ஆகி விடுகிறது.
தமிழக மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு வரும்வரையில், இவை இரண்டும் விஜயகாந்துக்கு வலிமையாக இருக்கலாம். ஆனால் தலைமைப் பண்பு, பேச்சில் தெளிவு, நடைமுறையில் நாகரிகம் ஆகியனவற்றை எல்லாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், இந்த இரண்டு ‘வலிமைகள்’ மட்டும் போதும் என்று அவர் கருதுவாரெனில், அது நீண்ட காலம் நிலைக்காது. அரசியல் நேர்மையை அவரால் தொடர்ந்து அவமதித்துவிட முடியாது. பேச்சுக்காகக் கூட, ” மக்கள் தொண்டாற்ற வருகிறேன்” என்று கூறாமல், ‘கிங்’காக மட்டுமே வரக் காத்திருக்கும் அவருக்காகக் காத்திருப்பது, பெரிய கட்சிகளின் தகுதிக்கு உரியதன்று என்று கூறியிருந்தார். இந்த கட்டுரை திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


