புதுதில்லி: ஓபிஎஸ். இபிஎஸ்., ஆகியோர் அடங்கிய அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட இந்த வழக்கில், அதிமுக.,வுக்கு சாதகமாக வந்துள்ள தீர்ப்பால் ஆளும் தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், சிலகாலம் அப்படியே இருந்த அதிமுக., பின்னர் இரண்டானது. தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலா என இரண்டு பிரிவாகப் பிரிந்து, அப்போது இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ்., உரிமை கொண்டாட, தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கி வைக்கப் பட்டது.
பின்னர் சசிகலா அணியில் இருந்த ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் இணைந்து அதிமுக.,வை தூக்கி நிறுத்த, அதில் இருந்து வெளியேற்றப் பட்ட சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் பின்னாளில் அமமுக என்று தனிக்கட்சியைத் தொடங்கினார்
அப்போது, இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.
இருப்பினும், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இருவரும் இணைந்ததால், அவர்கள் இருவர் தலைமையிலான, அ.தி.மு.க.,வுக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில், தினகரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், இரட்டை இலைச் சின்னத்தை அதிமுக.,வுக்கு ஒதுக்கியது செல்லும் என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானதே என்றும் கூறி, தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப் பட்டது.