யாகம் செய்தால் மழை வருமா என்றனர் தற்குறிகள்; அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் மழை பெய்து வருகிறது என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
அவர் தனது டிவிட்டர் பதிவில், கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்தால் மழை வருமா என்றனர் தற்குறிகள். தமிழகம் முழுவதும் பூஜைகள் தொடங்கியுள்ளன. சேலம், வேலூர், திருச்சி, திருப்பூர், அவிநாசி, மதுரை, சென்னையில் பட்டாபிராம் என்று மழை பெய்து வருகிறது. தமிழகம் மீண்டும் ஆன்மிக பூமி ஆகட்டும். வளம் பெறுவோம்… என்று கூறியிருக்கிறார்.
மழை தண்ணீர் இல்லாமல் வறட்சி தாண்டவமாடியதால், அறநிலையத்துறையின் முக்கியமான கோயில்களில் இசை மீட்டு, வருண ஜபம் செய்து, மழைக்காக பிரார்த்தனைகள் செய்யுமாறு அறநிலையத்துறை ஆணையர் கூறியிருந்தார். இதனை தி.க.வினர் கேலி கிண்டல் செய்து, மிகப் பெரும் குற்றம் போல் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் அவர்களின் பகுத்தறிவுக்கு விடை சொல்வது போல், மழைக்கான சூழல் உருவாகியுள்ளது. வடக்கு தமிழகத்தில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்பு மையமும் தெரிவித்தது. அதன்படி தற்போது தமிழகம் மற்றும் சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடம் மழை பெய்து வருகிறது. இதனை மக்கள் மகிழ்ச்சியுடன் சமூக வலைத் தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
திருவள்ளூர், தருமபுரி, மதுரை மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. ஆங்காங்கே மின்னலுடன் இடியும் இடிக்கிறது.
நேற்று முதல் திருப்பூர், நாமக்கல், தேனியில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகம் மட்டும் இல்லாமல் கர்நாடகாவிலும் மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் பல இடங்களில் பலத்த மழையும், சூறைக்காற்றும் வீசி வருகிறது.
இந்த வருடம் வெயில் கடுமையாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இரவு பகலாக தண்ணீர் லாரிகளில் தண்ணீர் குடங்களுடன் மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான் மழைக்கான பிரார்த்தனைகள் கோயில்களில் முன்வைக்கப் பட்டன. அதற்கு ஏற்ப மழை பெய்வதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைக் கேள்வியாகக் கேட்டுள்ள ஹெச்.ராஜா, தமிழகம் ஆன்மிக பூமி என்று கூறியுள்ளார்.
அதே நேரம், வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என்று கூறிய நிலையில் வருண ஜபம் செய்யச் சொல்லியிருப்பதாக தி.க.வினர் அடுத்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்தால் மழை வருமா என்றனர் தற்குறிகள். தமிழகம் முழுவதும் பூஜைகள் தொடங்கியுள்ளன. சேலம், வேலூர், திருச்சி, திருப்பூர், அவிநாசி, மதுரை, சென்னையில் பட்டாபிராம் என்று மழை பெய்து வருகிறது. தமிழகம் மீண்டும் ஆன்மிக பூமி ஆகட்டும். வளம் பெறுவோம்.
— Chowkidar H Raja (@HRajaBJP) May 7, 2019



