ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூற, ஆளுநரோ மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்திருக்கிறார்.
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என ராஜீவ் குண்டுவைத்துக் கொல்லப்பட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
ராஜீவ் படுகொலை தொடர்பில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் உரிமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு; அவர் மட்டுமே இந்த வழக்கில் தீர்மானிக்கும் உரிமை பெற்றவர் என்று குறிப்பிட்டது.
இதனிடையே, ராஜீவ் படுகொலை தொடர்பில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்து அந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு கொடுத்த உரிமையை மேற்கோள் காட்டி, குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவு எடுப்பார். இதில் இனி நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவுவெடுக்கும் உரிமை ஆளுநருக்கு மட்டுமே உண்டு என்பதை நீதிபதிகள் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
ஆளுநரின் கையொப்பம் இருந்தால் மட்டுமே ஏழு பேரின் விடுதலை சாத்தியமாகும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது மீண்டும் உறுதி செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் இதில் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய ஆளுநர் கையொப்பம் இட வேண்டும் என்றார்.
இருப்பினும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் முடிவெடுக்க முடியாது! ஆளுநருக்கு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசின் ஒப்புதல் அவசியம்!