மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப் பட்டனர்.
கடந்த வாரம் அரவக்குறிச்சி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமலஹாசன் இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து என்று கூறியிருந்தார். அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னிலை, தொப்பம்பட்டி, நொய்யல் குறுக்குசாலை, ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சரியாக இரவு 9 மணியளவில் கரூர் வேலாயுதம்பாளையம் மழை வீதி பகுதியில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில், இரவு 7 மணி அளவில் 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் பொதுக் கூட்டம் நடைபெறவிருந்த இடம் அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளச் சென்றதால், போலீசார் 4 பெண்கள் உட்பட 50 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .