இடைத்தேர்தல் முடிவுகளால் தங்கள் ஆட்சி இடையிலேயே போய் விடுமோ என்ற கலக்கத்தில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் கடும் கலக்கத்தில் உள்ளனராம்.
தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கருத்து கணிப்புகள் நேற்று வெளியாயின. இடைத் தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லாததால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலக்கமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது
தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அதிமுகவுக்கு சபாநாயகருடன் சேர்த்து 114, திமுகவுக்கு 88 அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 8 முஸ்லிம் லீக்குக்கு ஒன்று என உள்ளது.
தற்போதைய சூழலில் பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை எனும் போது, அதிமுக.,வுக்கு தற்போது 109 உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப் படுகிறது. டிடிவி தினகரன், அவரது ஆதரவு அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் போக, அதிமுக., சின்னத்தில் நின்று வென்ற தனியரசுவைத் தவிர மற்ற இருவர் அதிமுக.,வுக்கு எதிராக இருப்பதால், 117 என்ற பெரும்பான்மையைப் பெற மேலும் 8 உறுப்பினர்களின் ஆதரவு அதிமுக.,வுக்கு தேவைப் படுகிறது.
இந்நிலையில், காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர்! அதிமுக சின்னத்தில் நின்று வென்ற எம்எல்ஏக்கள் ஆக உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் ஆகியோர் அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்!
எனவே இவர்களை தவிர்த்து அதிமுக பெரும்பான்மை பெற குறைந்தது எட்டுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்! இல்லை எனில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவது நிச்சயமாகியுள்ளது! எனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை விட இடைத்தேர்தலில் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்பதிலேயே அதிமுக அதிக கவனம் செலுத்தி வந்தது
தேர்தல் முடிந்த நிலையில் பத்து தொகுதிகளுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிமுகவினர் உள்ளனர்! இடைத்தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரும்; ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திடமாக நம்பிக்கை கொண்டுள்ளனர்
இந்நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகின! அதில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக குறைந்தது 25 முதல் 32 தொகுதிகள் வரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுபோன்று இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் அதிமுகவுக்கு 5 க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன
இது முதலமைச்சர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக தொகுதிகள் கிடைக்காவிட்டால் ஆட்சியை தக்கவைக்க அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அதிமுகவினர் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்!