தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க பாஜக., தனியாகவே தயாராகி வருவதாகக் கூறப் படுகிறது.
தமிழகத்தில், அதிமுக., தலைமையில் வலுவான கூட்டணி அமைத்தும், பாஜக., தோல்வியை தழுவியதால், தனித்துப் போட்டியிட பாஜக., மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப் படுகிறது. அதன் ஒரு முன்னோட்டமாக. வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காண முடிவு செய்துள்ளதாம். மேலும், கிராமங்கள் அளவில் வேரூன்ற உள்ளாட்சித் தேர்தலை சரியானபடி அணுக வேண்டும் என்று கட்சியில் குரல்கள் ஒலித்துவருகின்றன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக., நாடு முழுதும் நல்ல வெற்றியைப் பெற்றாலும், தமிழகம் ஆந்திரம் கேரளத்தில் தோல்வியைத் தழுவியது. மற்ற இரு மாநிலங்களை விட தமிழகத்தில் ஏற்கெனவே தனித்தும், இரு கழகங்கள் இல்லாத கூட்டணியிலும் இருந்து ஓரிரு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதால், பாஜக., இந்தத் தோல்வியை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறது.
இதை அடுத்து தமிழகத்தில், பாஜக., தோல்வி அடைந்ததற்கான காரணங்களை கட்சி மேலிடம் ஆராய்ந்து வருகிறது. அப்போது, தமிழகத்தில், பாஜக.,வின் பலத்தை அதிகரிக்கவும், கிராம அளவில் கட்சியை பலப்படுத்தவும், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்துள்ளனர்.
குறிப்பாக, அதிமுக.,வின் வாக்கு வங்கி தகர்ந்துள்ளது குறித்தும், அதன் ஓட்டு சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது குறித்தும், அதிமுக.,வுடன் கூட்டணி வைத்ததால்தான் பாஜக.,வுக்கும் தோல்வி கிடைத்துள்ளது என்பது குறித்தும் அலசப் பட்டுள்ளது.
எனவே இந்த சோதனை முயற்சி தோல்வி அடைந்துள்ளதால், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காண வேண்டும் என்று அறிக்கை ஒன்று மேலிடத்துக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக, பாஜக., போட்டியிட்ட, ஐந்து மக்களவைத் தொகுதிகளில் ராமநாதபுரம், கோவை ஆகிய தொகுதிகளில் குறைந்த வித்தியாசத்தில் பாஜக., தோல்வி அடைந்துள்ளது என்றும், ஆனால் அதிமுக., வேட்பாளர்களோ மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர் என்றும், எனவே தமிழகத்தில் ஏற்பட்ட இந்தத் தோல்வி, பாஜக.,வுக்கு எதிரான அலை அல்ல; அதிமுக,வுக்கு எதிரான அலைதான் என்றும் ஆலோசனை கூறப் பட்டதாம்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஒதுக்கீடு செய்யப் பட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதை வைத்து, கீழ் மட்ட அளவில் கட்சியை பலப்படுத்தி இப்போதே களம் காணத் தயாராகுமாறு கட்சியினருக்கு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அதிமுக., கூட்டணி அமையும் முன்னர், மக்களவைத் தேர்தலிலும் கூட பாஜக., தனித்தே போட்டியிட தயாராகி வந்தது. இருப்பினும் வட மாநிலங்களில் தொகுதிகள் கிடைக்காமல் போனால், சில தொகுதிகள் தமிழகத்தில் கூட்டணி மூலம் கூடுதலாகக் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் தமிழகத்தில் கூட்டணிக்கு முயற்சி செய்தது. .ஆனால், வடமாநிலங்கள் கைகொடுத்ததால், இம்முறை பாஜக., தனித்தே பெரும்பான்மை பெற்று விட்டது. இதை அடுத்து, தமிழக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறப் படுகிறது.



