தேர்தலில் அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்தாலும், தமிழக அளவில் பொதுமக்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியைத்தான் விரும்புகின்றனர் என்று கூறினார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக., படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து அமைச்சர்கள், அதிமுக., நிர்வாகிகள் உள்ளிட்டோர் தங்களை சுயபரிசோதனை செய்து வருகின்றனர். சிலர் தோல்வி குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திமுக.,வின் பொய்ப் பிரசாரமே தோல்விக்கு காரணம் என்று கூறினர் அதிமுக.,வினர். இந்நிலையில், தாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி தான் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கின்றனர் என்று கூறியுள்ளார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொள்வோம். இனி நாங்கள் மேலும் சிறப்பாகப் பாடுபடுவோம். அடுத்து வர இருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற பாடுபடுவோம். வரும் தேர்தலில் அதிமுக., அதிக இடங்களில் பெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
கரூர் மாவட்டத்தின் 7 வது புதிய தாலுக்காவாக புஞ்சைப் புகளூர் தாலுக்காவாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற் கிணங்க, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் என்று வந்ததையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததையடுத்து, இன்று கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில், புஞ்சைப்புகளூரை மையமாக கொண்டு தனி தாலுக்காவாக உருவாக்கப்பட்டு, அலுவலகமும் திறக்கப்பட்டது.
பெரும் விழாக்கோலமாக கொண்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இந்த தாலுக்கா மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன், மேலும்,. ஒவ்வொரு புதிய வருவாய் வட்டங்கள் உருவாக வேண்டுமென்றால் அதற்கு என்று தனித்தனியாக விதிகள் உள்ளதாகவும், அவ்வாறே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இருந்து தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலம் வரை ஏராளமான வருவாய் வட்டங்கள் உருவாகியுள்ளது.
பொதுமக்களின் நன்மைக்காக ஆங்காங்கே உருவாக்கப்பட்டு வரும் இந்த வட்டங்களினால் பெரிதளவில் பொதுமக்கள் நன்மை கிடைப்பதாகவும், மேலும், ஒரு சிலர் சுயநலத்திற்காக அரசு மருத்துவக்கல்லூரி வேறு இடத்தில் அமைக்கப்பட்டிந்த நிலையில், மக்களுக்காக பயன்படுத்தப்படும் வகையில் தற்போது மருத்துவக்கல்லூரி புதிய வடிவில் தயாராகியதோடு, இந்த வருடம் மாணவர் சேர்க்கையும் நடைபெற உள்ளதையும், பொதுமக்களிடம், ஒரு சிலரின் பொய் பிரச்சாரத்தினை நம்பி பொதுமக்களும், சரி, அ.தி.மு.க வினரும் ஏமாற மாட்டோம் என்றும், அம்மாவின் ஆட்சியும், அம்மாவின் உருவில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசை அசைக்க முடியாது என்றும், எத்தனை தேர்தல்களிலும் அம்மாவின் ஆட்சி தான் அமையும் என்றார். விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா மாறுதல், அத்தியாவசிய சான்றுதல், வருமான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தினை இரண்டாக பிரித்து மக்களின் வசதிக்காக, புஞ்சைப்புகளூர் பகுதியினை தனிதாலுக்காவாக, பிரித்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவித்த இந்த திட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்று முதல்வர் உத்திரவினால் இந்த புதிய வட்டாட்சியர் அலுவலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 27 வருவாய் கிராமங்கள் இந்த வட்டத்தில் அடங்கும் என்றார். மேலும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில், தோல்வியடைந்தாலும், தமிழக மக்கள், 9 சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை விரும்பி தான் வாக்களித்துள்ளனர்.
ஆகவே, இந்த தோல்வியை பாடமாக வைத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் பணியாற்றுவோம் என்றார். பேட்டியின் போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உடனிருந்தார்.




