ராணுவத்தினருக்கு வழங்கப்படும் ‘பலிதான்’ பேட்ஜ் பதித்த கீப்பிங் கிளவுஸ் அணிந்து தோனி விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் சுற்று ஆட்டம் கடந்த 5-ஆம் தேதி சௌதாம்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி இந்திய ராணுவத்தின் பலிதான் பேட்ஜ் முத்திரை பதித்த கீப்பிங் கிளவுஸ் அணிந்து விளையாடினார். இது இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தோனியின் நாட்டுப் பற்றுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் இந்த முத்திரையை நீக்க வேண்டும் என பிசிசிஐயிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தி கடிதம் எழுதியது. மேலும், ஒரு கிளவுசில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு முத்திரைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இது குறித்து பிசிசிஐ., ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில் தோனி அணிந்துள்ள கிளவுசில் இடம்பெற்றுள்ள முத்திரை மத ரீதியானது இல்லை எனக் குறிப்பிட்டு அதற்கான அனுமதியை வழங்குமாறு கூறியது. ஆனால், பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
இதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோனி வேறு கிளவுஸ் அணிந்து விளையாடக் கூடும். இது இந்திய ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.