வரும் 4 ஆம் தேதி மேலும் 500 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் இயக்கி வைக்க உள்ளார் என்றும் 5 ஆயிரம் புதிய பேருந்துகளில் 4 ஆயிரம் பேருந்துகள் வழித்தடங்களில் இயங்குகின்றன என்றும், இன்னும் புதிய பேருந்துகள் தேவை என்று கோரி போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையில் முன் வைப்போம் என்றும் கூறினார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் 5 பள்ளிக் கட்டட திறப்பு விழா மற்றும் ஐயர்மலை அரசு கலைக் கல்லூரியில் பூமி பூஜை விழா என்று 3 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய கட்டடங்களையும், பூமி பூஜையையும் தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வரும் 25ஆம் தேதி, போக்குவரத்து துறைக்கான மானியக் கோரிக்கைகள் நடைபெற உள்ளன. அந்தக் கோரிக்கைகளில் போக்குவரத்து துறைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார்
ஜெயலலிதாவின் அரசு 5 ஆயிரம் புதிய பேருந்துகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. இதில், 4 ஆயிரம் பேருந்துகள் வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஆயிரம் பேருந்துகள் இயக்க வேண்டும்.
வரும் 4 ஆம் தேதி, தமிழக முதல்வர் 500 பேருந்துகளை இயக்கி வைக்க உள்ளார்! இந்த நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகள் வேண்டுமென்றும் கோரிக்கை வைப்போம்! அதையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்று கூறினார்.
விஜயபாஸ்கர் பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ சசிகலா ரவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.