கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்; 2வது நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!

Published:

edappadi inaugurates water project1 - 2026

சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் 2-வது சுத்திகரிப்பு நிலையத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் தமிழக அரசால் முன்னர் அறிவிக்கப் பட்டன. வளர்ந்து வரும் சென்னை நகரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது மேலும் மேலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2-வது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் கடற்கரை ஒழுங்கு முறை மண்டலத்தின் அனுமதி பெறப்பட்டு, இதன் இரண்டாவது சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப் பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பூமிப்பூஜையில் கலந்து கொண்டு, இதற்கான அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

edappadi inaugurates water project - 2026பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலைப் பணி வரும் 2021-ம் ஆண்டு முடிக்கப்படும். இதன் மூலம் சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இதன் மூலம் 9 லட்சம் பேர் பயனடைவர்.

வறட்சி பாதித்த பிற கடலோர மாவட்டங்களிலும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளை தொடங்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2 வாரத்தில் செயல்படுத்தப்படும்.

தொழிற்சாலைகள் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்துக்கு சாதகமான திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.. என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img