தமிழகத்தில் ஓடும் எந்த பேருந்துகளிலும் இந்தி எழுத்துக்கள் இல்லை. வெளி மாநிலத்தில் தயாரித்து கொண்டு வரப்பட்ட அரசுப் பேருந்தில் இந்தி ஸ்டிக்கர்கள் இருந்தன; பயணிகள் சேவைக்கு விடுவதற்கு முன்பே அரசு பேருந்திலிருந்து இந்தி ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டு விட்டன என்று, தமிழக போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.
இதற்குக் காரணம், கனிமொழி போட்டிருந்த ஒரு டிவீட்டும், அதற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும்!
தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம். #stopHindiImposition -என்று கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.#stopHindiImposition pic.twitter.com/SqAQfEJI6N
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 7, 2019
தமிழக அரசு வாங்கியுள்ள பேருந்துகளில் எல்லாம் அவசர வழி, தீ அணைப்பான் ஆகியவை எல்லாம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளதாக கடும் கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து போக்குவரத்துத் துறை, அந்தப் பேருந்துகள் வெளி மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டவை என்றும், அவற்றில் இருந்த ஸ்டிக்கர்கள் அகற்றப் பட்டு, தமிழில் மாற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் ஒரே ஒரு பேருந்தில்தான் அவ்வாறு இருந்ததாகவும் ஒரு விளக்கம் வந்துள்ளது.
உண்மையில்,ஹிந்தியில் எழுதப் பட்டிருப்பது போன்ற படங்கள், பேஸ்புக் சமூக வலைத்தளப் பக்கத்தில், அரசுப் பேருந்து சேவைக்காகவே ஏற்படுத்தப் பட்ட பேஸ்புக் குழுமத்தில் வெளியானது. அதில் புதிய பேருந்து ஒன்றின் படமும் போடப் பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பில் 500 புதிய பேருந்துகள் சமீபத்தில் வாங்கப்பட்டன. இந்த பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 150 பேருந்துகள், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 10 பேருந்துகள், கோவைக்கு 30 பேருந்துகள், கும்பகோணத்திற்கு 110 பேருந்துகள், மதுரைக்கு 50 பேருந்துகள், நெல்லைக்கு 30 பேருந்துகள் என மொத்தம் 500 புதிய பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளில் அவசர வழி, தீ அணைப்பான் ஆகிய எச்சரிக்கை எழுத்துகள், ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசின் இந்தித் திணிப்பே காரணம் என்றும் வேண்டுமென்றே ஒரு பொய்ச் செய்தியை வழக்கம் போல், திமுக., வின் எம்.பி., கனிமொழி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டார்.
ஆனால் இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழகப் போக்குவரத்துத் துறை, வெளி மாநிலத்தில் இருந்து இந்த பேருந்துகளை இறக்குமதி செய்துள்ளோம்! அதனால் அதில் இந்தி மற்றும் ஆங்கிலம் கொண்ட ஸ்டிக்கர் டி-ஃபால்ட்டாக ஒட்டப்பட்டு அனுப்பப் பட்டன. ஆனால் பயணிகளின் சேவைக்காக அனுப்பப்படுவதற்கு முன்னரே இந்த ஸ்டிக்கர்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன. தற்போது தடத்தில் ஓடும் எந்தப் பேருந்திலும் இந்தி மொழி ஸ்டிக்கர்கள் இல்லை” என தெரிவித்துள்ளது.