
திமுக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் நடைபெற உள்ள வேலூர் மக்களவை தேர்தலில் இளைஞர் அணியினர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளா்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: இளைஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அவர்களது கோரிக்கைகள், என்னிடம் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்து மனம் விட்டு பேசி இருக்கிறோம். இது மிகவும் சிறப்பான ஒரு அனுபவமாக எனக்கு இருந்தது. அவர்களின் கோரிக்கை, எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக எனது செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படும்.
திமுக உறுப்பினர் சேர்க்கை தான் எங்கள் முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார்.
. அதற்கு ஒரு இலக்கு மற்றும் கால வரையறை வழங்கி இருக்கிறேன். அதற்காக, நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். சுற்றுப்பயண தேதி பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


