திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சிராஜூதீன். இவரது மகள் மகபுநிஷா. வயசு 13. அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள்.
சில தினங்களுக்கு முன்பு மகபுநிஷாவுக்கு உடல் நிலை சரியின்றி போகவே வீட்டில் உள்ளவர்கள் அவளை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது, நிறைய மருந்து மாத்திரைகளை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த மருந்துகளை வீட்டில் இருந்தபடி சிறுமி சாப்பிட்டு வந்திருக்கிறாள். கடந்த 24ந்தேதி மகபுநிஷா வீட்டில் வழக்கமாக இருந்த இடத்தில் இருந்து மாத்திரையை எடுத்து சாப்பிட்டாள். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு வாந்தி மயக்கம் ஏற்படவும் பெற்றோர் பயந்து போய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
மகபுநிஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் எலிமருந்து மாத்திரையை சாப்பிட்டு இருப்பதாக சொன்னார்கள். வீட்டில் மருந்து மாத்திரை இருந்த இடத்தில் எலி மருந்து மாத்திரை இருந்ததை தெரியாமல் மகபுநிஷா வயிற்றுவலி மாத்திரை என நினைத்து சாப்பிட்டது தெரிய வந்தது.
தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மகபுநிஷா பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து சிராஜூதீன், காந்தி மார்க்கெட் காவல்துறையில் புகார் செய்யதார். அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்