தமிழகத்தில் இந்த வருடம் தென் மேற்கு பருவமழை 27 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது என்று கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும், உள்தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பில்…
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை!
வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும். இந்த மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்!
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் 4 செ.மீ., நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தலா 3 செ.மீ., மழை பதிவானது.
தென்மேற்குப் பருவ மழை, வழக்கத்தை விட தமிழகத்தில் 27% குறைவாகப் பெய்துள்ளது. 13 செ.மீ., பெய்ய வேண்டிய மழை தற்போது வரை 9 செ.மீ., மட்டுமே பெய்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 55%, கோவையில் 74%, தூத்துக்குடியில் 71% பெரம்பலூரில் 65% ராமநாதபுரத்தில் 67% அளவுக்கு மழை குறைவாகவே பெய்துள்ளது.
அதே நேரம், தென் மேற்கு பருவமழை காலத்தில் சென்னை, திருவண்ணாமலையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்துள்ளது. சென்னையில் 17 செ.மீ., அளவுக்கு பெய்ய வேண்டிய மழை 25 செ.மீ., அளவுக்கு பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 செ.மீ., அளவுக்கு பெய்ய வேண்டிய மழை 26 செ.மீ., அளவுக்கு பெய்துள்ளது.. என்று சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவிக்கிறது.