நவராத்திரி ஸ்பெஷல்: கதம்ப வன வாசினி என சொல்கிறார்களே… ஏன்?

Published:

lalithambal
lalithambal

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!

கேள்வி: அம்பிகைக்குப் பிரியமான கதம்ப விருட்சத்தின் சிறப்பு என்ன?

பதில்:’ கதம்பவன வாசினி’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் காணப்படுகிறது. அம்பிகையின் மணித்வீபத்தில் கதம்ப விருட்ச வனம் உள்ளது. அது அம்பிகையின் பிராகாரங்களில்  ஏழாவது பிராகாரம்.

அந்த திவ்யமான கதம்ப வனத்தில் அம்பிகையின் மந்திரிணீ சக்தியான சியாமளாதேவி அநேக ரக  சக்திகளோடு வசிக்கிறாள். சியாமளா என்றால் ஞான சக்தி ஸ்வரூபிணி. எத்தனை விதமான ஞானங்கள் உண்டோ அத்தனையும் அளிக்கக்கூடிய ‘சாரஸ்வத’ சக்தி அவள். சரஸ்வதி, சாரதா, பாரதி… என்கிறோமே அந்த ஞான சொரூபிணியே சியாமளா. இவள்  லலிதா சகஸ்ரநாமத்தில் ‘மந்திரிணீ’ என்று வர்ணிக்கப்படுகிறாள்.

மந்த்ரிணீ தேவி  அம்பிகையின் ‘மந்த்ராங்கம்’ முழுவதையும் கவனித்துக் கொள்பவள். ஒரு நாட்டிற்கு அமைச்சர்கள் போல ராஜராஜேஸ்வரிக்கு சியாமளா தேவி.

மந்த்ராங்கம் என்றால் புத்திகூர்மை தொடர்பான விஷயம். ஆதலால் சியாமளா தேவி ஞானதாயினி. ஞானம் பலவிதங்கள் உள்ளன. உலகியலான சங்கீதம் சாகித்தியம், கலைகள், வயிற்றுப் பாட்டுக்காக வித்யைகள், அத்தனையும் சியாமளா தேவிவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

ஷ்யாமளா தேவியின் பக்தனே  காளிதாச மகாகவி.

சியாமளாதேவி கதம்ப வனத்தில் வசிப்பவள். ஷ்யாமளாவுக்கு  அனேக ரூபங்கள் உள்ளன. நீப சியாமளா, வேணு சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா…  இவ்வாறு கூறப்படும் பல வடிவங்கள் உள்ளன. இந்த ரூபங்கள் அனைத்தும் கதம்ப வனத்தில் இருப்பவை.

அப்படிப்பட்ட கதம்ப வனம் அம்பிகைக்கு விருப்பமானது ஆனதால்  கதம்ப புஷ்பத்தால் பூஜை செய்தால் ஞானம் கிடைக்கப் பெறுகிறோம்.

மேலும் கம்பத்திற்கு மற்றொரு பெயர் ‘நீபா’ என்பது. ‘நீரம் பாதி பிபதி நீபா’ என்பது விளக்கம். கதம்பம் என்ற சொல்லில் ‘கம்’ என்பது ‘நீர்’ என்பதைக் குறிக்கிறது. 


கதம்ப விருட்சங்கள் ஆகாயத்திலுள்ள ஜல சக்திகளை ஆகர்ஷித்து மழை வடிவில் பொழியச் செய்கின்றன. அதனால் கதம்ப விருட்சம் ‘வர்ஷதாயினீ’  என்றழைக்கப்படுகிறது.

வர்ஷம் அதாவது மழை பிரபஞ்சத்திற்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது.  ஆதலால் மழை பொழிய வைக்கும் விருட்சமான கதம்பம் நமக்கு வரங்களின் மழையையும் பொழிய வைக்கக் கூடியவை. ஏனென்றால் பூமியில் வசிக்கும் நமக்கு மேல் உலகில் வசிக்கும் தேவதைகளே வரங்களை அருள வேண்டும். அந்த வரங்களைக் ஈர்த்து பொழியச் செய்யும் சக்தி எதுவோ அதுவே கதம்பவனம் எனப்படுகிறது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

அப்படிப்பட்ட கதம்ப மரங்களில் பலவிதங்கள் உள்ளன. கதம்ப மலர்களில் கூட பலவிதங்கள் உள்ளன. முக்கியமாக புகழ்பெற்ற கதம்ப மலர் கோள வடிவில் இருக்கும். பச்சை நிறத்தில், அதைச்சுற்றி கிரணங்கள் போல கேசங்கள் இருக்கும்.  அது சிரேஷ்ட்டமான கதம்பம் எனப்படுகிறது.

இவற்றைக் கொண்டு அம்பிகையை வழிபட்டால் நமக்கு கிடைக்க வாய்ப்பே இல்லாத வரங்களைக் கூட கிடைக்க செய்யும் என்பது கதம்ப  புஷ்ப அர்ச்சனையின் சிறப்பு. ஞானம் அளிக்கக் கூடியது என்பது பிரதானமான அம்சம்.

தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா

தமிழில்: ராஜி ரகுநாதன்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img