மனீஷா பஞ்சகம் தரும்… இன்றைய சூழலுக்கான ஞானம்!

Published:

adhi sankarar
adhi sankarar

‘மனீஷா பஞ்சகம்’ என்பது ஆதி சங்கரரால் இயற்றப்பட்டது.
‘மனீஷா’ என்கிற வார்த்தை ‘ஞானம்’ அல்லது ‘உறுதி’ என்று பொருள்படும். ‘மனீஷா பஞ்சகம்’ என்றால் ஞானத்தைப் பற்றிய ஐந்து ஸ்லோகங்கள் என்று பொருள்.

ஆதிசங்கரரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் விளைவுதான் ‘மனீஷா பஞ்சகம்’ !

ஆதிசங்கரர், கங்கையில் நீராடிய பிறகு, தன் சீடர்களுடன் விஸ்வநாதர் கோவிலுக்குப் புறப்பட்டார். சாலை ஓரத்தில், ஒரு சண்டாளன் என்று கூறப்படும் தீண்டத் தகாதவனை, அவர் சந்திக்க நேர்ந்தது. அதைக் கண்ட ஆதிசங்கரின் சீடர்கள், அவனைப் ‘போய் விடு’ , ‘போய் விடு’ என்று வலியுறுத்தினார்கள். ஆதிசங்கரரும் மௌன சாட்சியாக இருந்தார். உடனே அந்த சண்டாளன் ஆதிசங்கரரைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்கிறான்.

அன்னமயாதன்னமயம் அதவா சைதன்யமேவ சைதன்யாத் |
த்விஜவர தூரீகர்தும் வாஞ்சஸி கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி ||

பிராமணர்களில் சிறந்தவரே ! நீங்கள் ‘போய்விடு, போய்விடு’ என்கிறீர்களே, நீங்கள் குறிப்பிடுவது இந்த உடலையா அல்லது ஆன்மாவையா? உணவினால் உருவான அன்னமய கோஷமான உடலை என்றால், நம் இருவருக்குமே அதே உடல்தானே? அல்லது பவித்ரமான ஆன்மா என்றால், எப்போது ஆன்மா என்பது பிரம்ம மயமானதோ அப்போதே அதற்கு ஏது பாகுபாடு? நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளக்குங்கள்….. என்றான்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

மேலும் கூறுகிறான், நீங்கள் குளித்த கங்கை நீரில் சூரியனின் பிரதிபிம்பம் தெரிகிறது. என் வீட்டின் அருகில் ஓடும் சாக்கடையிலும் சூரியனின் பிரதிபிம்பம் தெரிகிறது. இதனால் சூரியனிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? ஒன்றும் இல்லையே…!
அதே போல பொன்னால் செய்யப்பட்ட குடத்தில் இருக்கும் வெளிக்கும் (SPACE) மண்ணால் செய்யப்பட்ட குடத்தில் இருக்கும் வெளிக்கும் ஏதாவது வேறுபாடு உள்ளதா…. ஒன்றும் இல்லையே…..!

ஆன்மா என்னும் எல்லையற்ற கடலில் இந்த வேற்றுமை எங்கிருந்து வந்தது? ஆன்மா என்பது சலனமில்லாத, அமைதியான, எல்லையற்ற ஆனந்தக் கடலாகும். இப்படிப்பட்ட ஆன்மாவிற்கு வேதம் பயிலும் பிராமணன், நாயை உண்ணும் சண்டாளன் என்கிற பாகுபாடு எப்படித் தோன்றும்?
இதை எனக்கு விளக்கினால் நான் அதற்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்வேன் என்றான் சண்டாளன்.

ஆதிசங்கரர் ஒரு வினாடி சிந்தித்து, தன்னுடைய வேதாந்தத்தை தனக்கே கற்பிக்கிறான் இவன் என்பதையும் உணர்ந்து, அந்த சண்டாளனை பிரம்மமாக பாவித்துக் கால்களில் விழுந்து வணங்கி அதன் பிறகு எழுதியதே ‘மாநீஷா பஞ்சகம்’ !
மனீஷா பஞ்சகத்தில் மூன்றாவது ஸ்லோகம் மிகவும் ஸ்ரேஷ்டமானது !

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

கர்மாக்களில் மூன்று வகை உண்டு. அவை சஞ்சித கர்மா, பிராரப்தக் கர்மா, ஆகாமிய கர்மா !

இதில் கர்மா என்பது நாம் செய்யும் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பலன்கள். நல்ல கர்மாவின் மூலமாக ஆனந்தத்தையும் கெட்ட கர்மாவின் மூலம் துக்கத்தையும் அனுபவிப்போம்.

எத்தனையோ பிறவிகள் எடுத்து, அதனால் நாம் சேர்த்துக் கொண்ட கர்மங்களின் கூட்டே ‘சஞ்சித கர்மா’ !
இந்தப் பிறவியில் நாம் அனுபவிப்பதற்காகக் கொடுத்து அனுப்பப்பட்டதே ‘பிராரப்தக் கர்மா’ !

வாழும் இந்தக் காலத்தில் நாம் ஏற்படுத்துவது ‘ஆகாமிய கர்மா’ !
இந்த உலகமானது நிலையில்லாதது. அழியக்கூடியது. பிரம்மம் மட்டுமே என்றும் நிலையானது, என்றும் நிலைத்திருப்பது, பாகுபாடு காணமுடியாதது, வேறுபாடே இல்லாத ஒப்பற்றது.

எவர் ஒருவர் இந்த பிரம்மத்தை உணர்ந்து அதன் சாத்வீகத்தையும், உண்மையையும், எந்தவித பாதிப்புமில்லாமல் ஆராய்ந்து தெளிகின்றாரோ அவருக்கு இந்த வாழும் வாழ்க்கையில் பிரம்மத்திற்கும் மற்ற உயிர்களுக்கும் வித்தியாசம் பார்க்காத தன்மை ஏற்பட்டுவிடும்.

அந்த பற்றற்ற நிலையை, ஞானத்தை எவர் ஒருவர் பரிபூரணமாக அடைந்து விட்டாரோ அவரின் சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா ஆகியவைகளின் தாக்கம் முழுமையாக ஞானமெனும் தீயில் எரிக்கப்படும். அப்படிப் பட்டவராலேயே இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக இருக்கும் பிராரப்தக் கர்மா முடிந்ததும் ஜீவன் முக்தியை அடையமுடியும்.

  • எஸ்.பிரேமா
ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img