spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: ராமாயணத்தில் லங்கா தகனம்!

திருப்புகழ் கதைகள்: ராமாயணத்தில் லங்கா தகனம்!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 66
திருப்புகழில் இராமாயணம் – லங்கா தஹனம்
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆஞ்சநேயர் இலங்கையைக் கொளுத்திய தகவலை அருணகிரிநாதர் மற்றோர் இடத்தில் சொல்லிகிறார். இதோ அந்தப் பாடல்.

இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென …… முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் …… மருகோனே
(திருப்புகழ் 700 தலங்களில் வரும் – பெருங்குடி)

இலங்கையில், ஆஞ்சநேயர் நெருப்பு வைத்தபோது சில வீடுகள் தப்பித்தன. அது எப்படி என்பதை அழகாகவும் தெளிவாகவும் இப்பாடல் கூறுகிறது. ‘‘இலங்கையின் வீடுகளில் அருள் இல்லாதவற்றை நீ இருந்து பற்றிக் கொள்!’’ என்று சொல்லிச் சொல்லி, நெருப்பு வைத்தார் அனுமார்.

எனவே, அருள் உள்ளம் கொண்ட விபீஷணன் போன்றோரின் வீடுகள் தீக்கு இரையாகாமல் தப்பித்தன.. சீதாப்பிராட்டியாரைத் தரிசித்த ஆஞ்சநேயர், இராமரிடம் தகவல் சொன்ன பிறகு, நடந்த முக்கியமான நிகழ்ச்சி அணை கட்டியது. அதைச் சொல்லும் திருப்புகழ் வரிகள்

கடிது லாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க
மலைகள் போட ஆழி கட்டி …… யிகலூர்போய்க்
களமு றானை தேர்நு றுக்கி
தலைக ளாறு நாலு பெற்ற
அவனை வாளி யால டத்தன் …… மருகோனே
(திருப்புகழ் – 1316 – துடிகொள் நோய் – பழமுதிர்ச்சோலை)

வேகமாக வீசும் வாயு பகவான் பெற்ற அனுமாரும், வாலி மகன் அங்கதனும் ஏராளமான மலைகளைக் கொண்டு வந்து போட, கடலில் அணை கட்டி, பகைவனான இராவணனுடைய ஊருக்குப் போனார்கள். பகைவனது ஊராகிய இலங்கையை அடைந்து, போர்க்களத்தில் யானைப்படையையும் தேர்ப்படையையும் தூளாக்கி, பத்துத் தலைகள் கொண்ட இராவணனை அம்பினால் கொன்ற அண்ணல் இராமபிரான் கதையும் இப்பாடலில் சொல்லப்படுகிறது.

இதன் பிறகு இராம-இராவண யுத்தம்தான். போர்க்களத்தில் இராமரது பாணங்களுக்கு ஈடு கொடுக்க முடி யாமல் தவித் தான் இராவணன். அவன் உடலில் ராம பாணங்கள் துளையிட்டன. இராவணன் துடித்தான். திருப்புகழ் வரிகள் இதை விவரிக்கின்றன.

தலைமுடி பத்துத் தெறித்து ராவண
னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு
தநுவைவ ளைத்துத் தொடுத்த வாளியன் …… மருகோனே
(திருப்புகழ் 633 முலையை மறைத்து – கழுகுமலை)

அப்போதும் இராவணன் திருந்தவில்லை. இராமரை வணங்கி மன்னிப்புக் கேட்க வில்லை. தனது தவறை உணரவில்லை. அவன் தோள்களையும் பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளினார் இராமர்.

வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ
மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் …… மருகோனே
(திருப்புகழ் 489 இணங்கித் தட்பொடு – சிதம்பரம்)

இவ்வாறு முருகப் பெருமானைப் பாடிய அருணகிரியார், ஊடாக இராமரின் கதையையும் பாடிவைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe