உலக இளைஞர் திறன் நாள் | World Youth Skill Day
மனித குலத்தின் மாண்புகளைப் பாதுகாக்கவும், சிறந்த பண்பாடுகளைப் போற்றி பாதுகாக்கவும், மேலும் உயர்வு அடைவதற்கான வழிகளைச் செயற்படுத்தவும் உலக நாடுகள் கூட்டாக முயற்சித்து வருகின்றன. ஐ.நா. சபை அனுசரிக்கும் சிறப்பு தினங்கள் இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
உலக மேம்பாடு மற்றும் நாளைய உலகத்தின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் தானே இருக்கிறது. இளைஞர்கள் வல்லவர்களாக, திறன் படைத்தவர்களாக இருந்தால் தான் ஒவ்வொரு நாடும், உலகமும் மேன்மை அடைய இயலும்.
இந்த அடிப்படையில், சர்வதேச இளைஞர் திறன் தினம் ( World Youth Skill Day ) ஒவ்வொரு வருடமும் ஜூலை 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
எப்போது தோன்றியது ?
சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி அனுசரிக்கப் படுகிறது, இளைஞர்களின் உரிமைகள், இளைஞர்களுக்கான சட்டங்கள், கலை பண்பாடு உணர்வுகள் போன்ற விஷயங்கள் அன்றைய தினத்தில் கருத்தில் கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயினும், மாறி வரும் உலகத் தொழில்நுட்ப மாற்றங்கள், இயந்திரமயமாகும் அல்லது கணிணிமயமாகும் வேலை வாய்ப்புக் களத்தில், இளைஞர்கள் தங்களுக்கான திறன்களை அறிந்து, தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வசதிகளைச் செய்து தருதல் என்பது உலகளாவிய சவாலாகவே
பார்க்கப்பட்டது.
சர்வதேச இளைஞர்கள் ஆண்டு 2010ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது. இளைஞர்களின் தேவைகள், அவர்கள் முன் உள்ள சவால்கள் பற்றிய கருத்துகள் பல வல்லுநர்களால் வலியுறுத்தப் பட்டது. 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கணிப்புகளின் படி கிட்டத்தட்ட 74.5 மில்லியன் இளைஞர்கள் வேலையின்றி இருப்பது தெரிய வந்தது. அதிலும் “வளரும் நாடுகளில்” இளைஞர்கள் அதிக அளவில் வேலையின்றி இருந்தனர்.
வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல் என்பது ஒரு தீர்வாக இருந்தாலும், தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தகுந்தவாறு இளைஞர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதலும் ஒரு சவாலாக உருவாகிக் கொண்டிருப்பதை ஆய்வுகள் தெரியப்படுத்தின.
இளைஞர்களின் திறன் வளர்த்தல் பற்றி பல கருத்தரங்குகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ.நா பொதுசபை 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் “சர்வதேச இளைஞர் திறன் நாள்” பற்றிய தீர்மானத்தைக் கொண்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் நாள் “சர்வதேச இளைஞர் திறன் நாள்” அனுசரிக்கப்படும் என அறிவித்தது.
2015 ஆம் ஆண்டில் இருந்து ஜூலை 15 ஆம் நாள் சர்வதேச இளைஞர் திறன் நாள் கொண்டாடப்படுகிறது.
பல்வேறு துறைகளிலும் பத்தாண்டுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்குத் தேவையான திறன்கள் பற்றிக் கண்டறிதல்,திறன் வளர்த்தலுக்கான கட்டமைப்புகளை அமைத்தல், தொழில்நுட்பத் திறன் வளர் பட்டறைகள், பயிற்சி முகாம்கள் நடத்துதல்,இளைஞர்களின் பணி வாய்ப்புகள் மற்றும் பணித்திறனை மேலும் வளர்த்தல் ஆகியவை “சர்வதேச இளைஞர் திறன் நாள்” கொண்டாட்டத்தின் மூலம் நம் கவனத்துக்குக் கொண்டு வரப் படுகிறது. தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ( Technical and Vocational Education and Training ) சுருக்கமாக டி.வி.இ.டி ( TVET ) பல நாடுகளில் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் சர்வதேச இளைஞர் திறன் நாள்
நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு நாட்டிலேயே முதல் முறையாக “திறன் வளர்த்தல்” துறையை ஒரு தனி அமைச்சகத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்தது.
தற்போது நமது மத்திய அரசின், “ திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் துறை” ( Ministry of Skill Development and Entrepreneurship ) MSDE அமைச்சகத்துக்கு திரு.தர்மேந்திர பிரதான் கேபினெட் அமைச்சராகவும் திரு.ராஜீவ் சந்திரசேகர் இணை அமைச்சராகவும் உள்ளனர்.
நாட்டில் உள்ள பல்வேறு தொழில்பயிற்சிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்களையும் ஒருங்கிணைத்தல், வேலை வாய்ப்புக்கான திறன் வளர்த்தல் , தொழில் முனைவோருக்கான உதவிகளை வழங்குதல், தொழில் இடை பயிற்சிகளை நெறிப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களை இவ்வமைச்சகம் கவனிக்கிறது.
திறன்மிகு இந்தியா ( Skill India ) திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி பெற்று, தொழில் துவக்க உதவிகளும் பெற்றுள்ளனர். பெண்களுக்கான தொழில் பயிற்சி, டிஜிட்டல் இந்தியா, தொடங்கிடு இந்தியா ( ஸ்டார்டப் இந்தியா ) மேக் இன் இந்தியா என பல புதிய திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச இளைஞர் திறன் நாள் 2021 கருப்பொருள்
தொழில்கள் முடங்கியுள்ள இன்றைய கொரோனா சூழலில், இந்த வருடத்தின் கருப்பொருளாக, “இளைஞர்களின் திறனை மறுசீரமைத்தல்” ( Reimagining Youth Skills in Post-Pandemic ) ஐ.நா சபை அறிவித்துள்ளது.
உலக அளவில், பள்ளிகளும் பயிற்சி நிறுவனங்களும் பெரும்பாலும் மூடியே இருந்த நிலையில், இளைஞர்களுக்குப் புத்துணர்வு ஊட்டி, ஊரகப் பகுதிகளில் உள்ள டி.வி.இ.டி பயிற்சி நிறுவனங்களின் நிலைகளை ஆய்வு செய்து, வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி ஊக்கவித்தலே இன்றைய நிலையில் முன்னேடுக்க வேண்டிய பணியாக உள்ளது.
சமூகவலைதளப் பக்கங்களில் மூழ்கி பொழுதை வீணடிக்காமல், கைத்தொழில் கற்றல் அல்லது கற்பித்தலை சில இளைஞர்களும் மேற்கொள்ளலாம். சிறு குறு தொழில்களுக்கான அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கும் பணியையும் மேற்கொள்ளலாம்!
”சர்வதேச இளைஞர் திறன் நாள்” இளைஞர்களின் ஆற்றலை நெறிப்படுத்தி நம் பாரத்தைத் திறன்மிகு தேசமாக மிளிரச் செய்வோம் !
கட்டுரை: – கமலா முரளி